பழைய ஓய்வூதியத் திட்டம்.. தயாராகும் மத்திய அரசு ஊழியர்கள்.. எடுத்த அதிரடி முடிவு
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்க அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆவடியில் உள்ள ஓசிஎஃப் தொழிற்சாலை முன்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர் சம்மேளனத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமே இரண்டுக்குமே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜன. 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் போராடி வரும் நிலையில் மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து மத்திய அரசு நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் மத்திய அரசு கமிட்டி அமைத்தது. ஆனால், அந்தக் கமிட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிந்துரைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அதற்கு பதில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த ஆக.24-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இது சேவை காலம், சராசரி கடைசி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சதவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒருவர் 25 வருடங்களுக்கு மேல், மத்திய அரசு ஊழியராக இருந்தால் மட்டுமே, கடைசி வருடத்தில் அவர் வாங்கிய சம்பளத்தில் (Basic+DA : average pay for the preceding 12 months), 50% மாதாந்திர பென்ஷன் ஆக வழங்கப்படும். 25 வருடங்களுக்கு கீழ் வேலை செய்தவர்களுக்கு, pro-rata basis கணக்கீட்டில், பென்ஷன் வழங்கப்படும். உதாரணமாக, 10 வருடம் சர்வீஸ் முடித்து ஓய்வு பெற்றால், ₹10,000 மட்டுமே பென்ஷன் கிடைக்கும்.
25 ஆண்டுகள் பணிபுரிந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்ற பின், அவர் ஓய்வு பெரும் முன் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத் தொகையில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது. அதாவது ஒருவர் 25 வருடம் வேலை செய்து 80000 சம்பளம் வாங்குகிறார் என்றால், அவருக்கு 40 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டம் அப்படி அல்ல,, ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாயாக இருந்தால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாய் வழங்கப்படும். . (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற முடியும். இதுமட்டுமின்றி அக விலைப் படிக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது அதிகரிக்கும். இந்த திட்டம் பாதுகாப்பானது என்பதால், இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி வருகிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள். இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டு மக்கள் விரோத திடடங்கள் என்று அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் விமர்சித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்து, அதன் முதற்கட்டமாக காந்தி ஜெயந்தி தினத்தன்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி,சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஓசிஎஃப் தொழிற்சாலை முன்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், தொமுச பொதுச் செயலாளர் முகமது மீரா, எச்விஎஃப் தொழிற் சாலை முன்பு சங்கத்தின் தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் முத்துக்கருப்பன், செயற்குழு உறுப்பினர்கள் விஜயசீலன் மற்றும் தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்..












Click it and Unblock the Notifications