"லிஸ்டை அனுப்புங்க.." அண்ணாமலைக்கு வந்த பரபர உத்தரவு! தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக முடிவு?
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை தொகுதிகளிலும் பாஜக சார்பில் யார் போட்டியிடலாம் என்பது குறித்த லிஸ்டை டெல்லி தலைமை தமிழ்நாடு பாஜகவிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல்- மே காலகட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.

இந்தத் தேர்தலிலும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. தேர்தல் பணிகளை பாஜக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
வந்த பரபர உத்தரவு: இதற்கிடையே விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், டெல்லி தலைமையிடம் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குப் பரபர உத்தரவு வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலை அனுப்புமாறு அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக பாஜகவைத் தயார் செய்யும் வகையில் பிரதமர் மோடி தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிற்குப் பயணங்களை மேற்கொள்கிறார். அதன்படி சமீப காலத்தில் ஏற்கனவே இரண்டு முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார். இதற்கிடையே அடுத்த மாதம் மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாத இறுதிக்குள்: அதேபோல பாஜக தேசிய தலைவர் நட்டாவும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு வருகிறார். இந்தச் சூழலில் தான் அண்ணாமலைக்கு இந்த உத்தரவு சென்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்டியலைத் தயார் செய்து அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்காக 39 தொகுதிகளுக்கும் 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
லோக்சபா தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 3 தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பெயரை ஷார்ட் லிஸ்ட் செய்து அனுப்புமாறு டெல்லி தலைமை அண்ணாமலையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைக் கேட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை பாஜக தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வியை உங்கள் முன்பு எழுப்பலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கூட்டணி கணக்கு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது பாஜக தனக்கென ஒரு கூட்டணி உருவாகி வருகிறது.. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர தேமுதிக, தமாக, ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு எல்லாம் இதன் பிறகு நடக்கும் என்றும் அதற்கு முன்பு தகுதி வாய்ந்த நபர்கள் குறித்துத் தெரியவே இந்த பட்டியலை டெல்லி தலைமை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் பட்டியலை அனுப்ப டெல்லி தலைமை அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு சில நாட்களில் இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக வட்டாரங்கள் கூறுகிறது.












Click it and Unblock the Notifications