தமிழ்நாட்டில் தமிழர் உணர்வுகளுக்கு எதிரான பேச்சுகளை டெல்லி ரசிக்கவில்லை? பரபர மாற்றங்களின் பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் தமிழர் உணர்வுகளுக்கு எதிரான பேச்சுகளை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை என்பதையே கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் தலைகீழ் திருப்பங்கள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக அன்னிய கட்சியாக விலகி நிற்கிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு சார்ந்த விஷயங்களில் தமிழ்நாட்டு பாஜக மூத்த தலைவர்கள் பலரும் பெரும்பான்மைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்ததன் விளைவுதான் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை என்கிற கருத்தும் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறந்த இடம்.. தமிழின் சிறப்பு பலருக்கும் தெரியல.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
தமிழ்நாட்டு பாஜக தலைவர்களாக தமிழிசை ச்வுந்தரராஜன், எல்.முருகன் தற்போது அண்ணாமலை ஆகியோர் இந்த இடைவெளியை குறைப்பதில் கவனம் செலுத்தினர். எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரை தொடங்கி பல்வேறு செயல்பாடுகளை தமிழ்நாடு பாஜக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 1950,60-களில் திமுக எப்படி ஊர்தோறும் தம்மை வலுப்படுத்திக் கொள்ள பண்பாட்டு அடையாளங்களை கையில் எடுத்ததோ அதே பாணியை தற்போது பாஜகவும் கையிலெடுக்க முயற்சிக்கிறது.
ஆனால் இந்த முயற்சிகளுக்கு முழுமையான முட்டுக்கட்டையாக சமீபகாலமாக தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, தமிழர் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் வெடித்த சர்ச்சைகள் காரணமாக இருந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த சில கருத்துகளை தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் பகிரங்கமாகவே ஏற்கவில்லை என கூறி இருந்தனர். சேது கால்வாய் திட்டம் தொடர்பாகவும் மேம்பாக்கான ஒரு ஆதரவு நிலையை தமிழ்நாடு பாஜக வெளிப்படுத்தியது. இதற்கு காரணமே தமிழ்நாடு சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுடனான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துகள் வெளிவர வேண்டும் என்கிற டெல்லியின் கறார்தான் காரணம் என கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் தந்ததை மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளிடம் தமிழ்நாடு ஆளுநர் பேசிய பேச்சையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது, ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்த இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பை நடத்துவது மகிழ்ச்சி தருகிறது. பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம் குறித்த குறுகிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான் ஐபிஎஸ் பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன். தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்த போது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம்
நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்கள், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை கோயில் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என கூறுவீர்கள். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்ததையும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.