பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக- அமைச்சர் எஸ்.ரகுபதி சரமாரி அட்டாக்
சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று கூட்டிய தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை திமுகவின் நாடகம் என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை காப்பாற்ற பாஜக முயற்சிக்கிறது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது:
தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை.
முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்! இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications