வேளாண் துறை அமைச்சர் பதவி கே.பி. அன்பழகனுக்கு ஒதுக்கீடு- டெல்டாவில் கடும் அதிருப்தி?
சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டதில் டெல்டா மாவட்டத்தில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பாபநாசம் அருகே வன்னியடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டெல்டா எதிர்பார்ப்பு
அமைச்சர் துரைக்கண்ணு வசம் இருந்த வேளாண்துறை இலாகா யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தீவிரமான விவாதமாக இருந்தது. டெல்டா பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு என்பதால் பட்டுக்கோட்டை, பேராவூரணி எம்.எல்.ஏக்கள் இருவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜாதி அடிப்படை
அதேபோல் ஜாதிய அடிப்படையில் தமக்கே இந்த இலாகாவை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதிருப்தியில் டெல்டா
இது டெல்டா அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் டெல்டாவில் தேர்தல் நேரத்தில் இத்தகைய அதிருப்திக்கு இடம் தந்திருக்க தேவை இல்லை என்பது அதிமுக சீனியர்கள் கருத்து. இதேபோல் தாம் வலியுறுத்திய நிலையிலும் வேளாண்இலாகா ஒதுக்கப்படவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறாராம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்.
சமாதான முயற்சிகள்
இருப்பினும் தேர்தல் நேரத்து இந்த சலசலப்புகளை சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் அதிமுக மேலிடம் இருக்கிறதாம். இதற்காக டெல்டா மற்றும் வடமாவட்ட சீனியர்கள் மூலம் சமாதான முயற்சிகள் இன்னொரு பக்கம் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டும் வருகிறதாம்.