தாம்பரம் அருகே திமுக ஊராட்சி தலைவர் வீடு உள்பட 9 வீடுகள் இடிப்பு.. தரைமட்டம் ஆன ஆக்கிரமிப்புகள்
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள அகரம்தென் ஊராட்சி பகுதியில் அரசு புஞ்சை, தரிசு நிலங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அகரம்தென் ஊராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் வீடு உள்பட 9 வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த 2010ம் ஆண்டில் இருந்த மதிப்பையும், இப்போது உள்ள மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதை அறிய முடியும். தாம்பரத்தை சுற்றியுள்ள வேங்கைவாசல், அகரம்தென், மப்பேடு, கிளாம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர்,மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் நிலத்தின் மதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் சாலை வழி நிலங்கள், நீர்வழிப்பாதைகள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவின்படி அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தாம்பரம் அருகே உள்ள அகரம்தென் ஊராட்சி பகுதியில் அரசு புஞ்சை, தரிசு நிலங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த இடத்தில் அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் வீடு உள்பட 9 வீடுகளும், 3 கடைகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றபோது, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்துள்ளனர். இதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்பேரில் தாம்பரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ஜெகதீஸ்வரன் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது. அதன் பிறகு பொருட்களை எடுத்து செல்ல நேரம் கொடுக்கப்பட்டு மாலையில் முழுமையாக இடிக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் வீட்டுக்குள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்த போலீசார், ஊராட்சி தலைவரின் வீட்டின் முகப்பு மற்றும் பின்பகுதியை இடிக்க ஒத்துழைத்தனர். தொடர்ந்து மற்ற வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 9 வீடுகள், 3 கடைகள் முழுமையாக அகற்றப்படும் என வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை எத்தனை வருடம் குடியிருந்தாலும், அரசு கட்டாயம் இடித்து அகற்றும் என்பதை அடிக்கடி இந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன.












Click it and Unblock the Notifications