மக்களே கவனம்.. காய்ச்சல் வந்தால் அலர்ட்.. டெங்கு பரவுதாம்.. பொது சுகாதாரத்துறை மேஜர் அறிவுறுத்தல்
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளன. தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மழைக்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நோய்களான டெங்கு, எலி காய்ச்சல் போன்றவற்றின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் அதிகம் காணப்படும் இந்த நோய் பரவல் தமிழக எல்லையோர மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது, கன்னியாகுமரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

டெங்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் பொது சுகாதாரத்துறை ஆக்ஷனில் இறங்கியுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொதுசுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மருத்துவ மனைகள் , சுகாதார நிலையங்களில் தினமும் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைபெறுபவர்களின் விவரங்களை பெற வேண்டும்.
மருத்துவ முகாம் நடத்த வேண்டும்: காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குளோரின் கலந்து தண்ணீர் விநியோகம் செய்தல், டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழித்தல், நல்ல தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாத்துக்கொள்ளுதல், அதாவது டயர் போன்ற கழிவு பொருட்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறதா? என பார்த்து அது போன்ற பொருட்களை அகற்றுதல், நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல், ஏதாவது ஒரு இடத்தில் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டால் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அந்த பணிகளில் கிராமப்புற சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் இருந்து செய்யப்படும். இது தவிர மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன?: தேவையான மருந்துகள் கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் கொசு உற்பத்தி ஆவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்" போன்ற அறிவுறுத்தல்கள் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் வலி, வயிற்று வலி கண்ணுக்கு பின்னால் வலி, எலும்பு வலி ஆகியவையே டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் ஆகும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மெடிக்கல்களில் வாங்கி மாத்திரைகளை போடக்கூடாது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை செய்து விட வேண்டும்.












Click it and Unblock the Notifications