வாடகை வீட்டு படுக்கை அறையில் பேனா கேமரா! பல் மருத்துவர் கைது.. சென்னை ராயபுரத்தில் ஷாக்
சென்னை: சென்னை ராயபுரத்தில் வாடகை வீட்டின் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த வீட்டின் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது மதிப்புள்ள இளம் பெண் 2 ஆவது தளத்தில் உள்ள வீட்டில் கணவர் மற்றும் 9 வயது மகனுடன் வசித்து வந்தார். அவருடைய கணவர் கிண்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது படுக்கை அறையை அந்த பெண் சுத்தம் செய்திருந்தார். அப்போது பளபளப்பாக ஏதோ இருப்பதை அறிந்தார். உடனே அதை எடுத்து பார்த்த போது பேனா இருந்தது. அதை உற்று பார்த்த போதுதான் அதில் கேமரா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவருக்கு போன் செய்து நடந்ததை சொல்லியுள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பேனா கேமராவை ஆய்வு செய்தார். அதில் தனது மனைவி உடை மாற்றும் காட்சிகளும், கணவன்- மனைவி உறவு வீடியோக்கள் என நிறைய வீடியோக்கள் பதிவாகியிருந்தன.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராஹிம் (35), குடியிருப்போரின் படுக்கை அறையில் கேமராவை பொருத்திவிட்டு செல்வதும் அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலீஸார் இப்ராஹிமை கைது செய்தனர். அவர் பல் மருத்துவர் என்றும் காசிமேடு பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் தற்போது சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர்தான் வாடகைக்கு குடியிருந்த இளம்பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து பேனா கேமராவை பொருத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து அவர் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications