பள்ளி ஆண்டு விழாவில் சினிமா பாடல்களை தவிர்க்கணும்! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 77 உத்தரவுகள்!
சென்னை: பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வகையான உத்தரவுகளை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உத்தரவுகள் பற்றி முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி இனி மாணவர்களின் மனம் பாதிக்கும் படி ஆசிரியர்கள் எந்த தண்டனையும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யும் பொருட்டு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை நகரம், குக்கிராமம் என பார்க்காமல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் நேரடி விசிட் அடித்து ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில் ஆசிரியர்களுக்கு 77 வகையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

சினிமா பாடல்கள்
அதன்படி பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் போன் பேசக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாணவர்களின் மனம் பாதிக்கும் படி ஆசிரியர்கள் எந்த தண்டனையும் வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபதிர்கள்
மேலும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிகள் பெறலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மரத்தடியிலும் பழுதான கட்டிடங்களிலும் மாணவர்களை அமர வைக்ககூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு மணி நேரம்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆசிரியர்கள் தங்கள் இ-மெயில்களை திறந்து பார்க்க வேண்டும் என்றும் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும் நமக்கென்ன என இருக்காமல் மாணவர்கள் சாலையை கடக்கும் போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மிக சீரியஸான முறையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications