துணை முதல்வர் டம்மி பதவி.. என்னை கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள்.. எடப்பாடி மீது ஓபிஎஸ் அட்டாக்
சென்னை: நான் அன்று ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. அன்று நான் எதிர்த்து வாக்களித்து இருந்தால், ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. துணை முதல்வர் டம்மி பதவி.. என்னை கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உண்டானது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று கொண்டார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடினார். எனிமும் நீதிமன்றமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது.

மேலும் ஓ பன்னீர் செல்வம் அதிமுக கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக சிறிது நாட்களாக அமைதி காத்த ஓ பன்னீர் செல்வம் தற்போது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்கிடையே பாஜகவுடன் அதிமுக இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஆதரவு அளித்ததால்: இந்த நிலையில் சமீப நாட்களாக ஓ பன்னீர் செல்வம் தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். நேற்று முன் தினம் திருச்சி வந்திருந்த பிரதமர் மோடியை ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியதோடு அவரிடம் கடிதம் ஒன்றையும் அளித்ததாக தகவல் வெளியானது. மேலும் அன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் இப்போது சொல்ல முடியாது.
காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என்று பேசினார். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம் நான் அன்று ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி அன்றைக்கு காப்பாற்றப்பட்டது என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா தான்: ஆட்சிக்கு ஒரு சோதனை வருகிறபோது அவர்களுக்கு ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு அவர்களுக்கு தேவையானது. ஓ பன்னீர் செல்வம் அன்று ஆதரவு அளித்ததால் தான் அந்த ஆட்சி அன்றைக்கு 5 ஓட்டுகளில் காப்பாற்றப்பட்டது. அன்று நான் எதிர்த்து வாக்களித்து இருந்தால், ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. கட்சியே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு இருக்கும்.
இப்படி கொஞ்சம் கூட.. துளி அளவு கூட நன்றி இல்லை. அவர் சொல்கிறார்.. ஓ பன்னீர் செல்வத்துக்கு நான் தான் முதலமைச்சர் பதவி கொடுத்தேன் என்று கூறுகிறார். ஜெயலலிதா எனக்கு தான் முதல்வர் பதவியை கொடுத்தார். கழகத்தில் எத்தனையோ மூத்த தலைவர்கள், கழகத்திற்காக அரும்பாடு பட்டவர்கள் என நிறைய பேர் இந்தார்கள். அப்போது ஜெயலலிதா எனக்கு தான் முதல்வர் பதவியை கொடுத்தார்.
டம்மி பதவி: முதல்வராக என்னை நியமனம் செய்தார்கள். ஆனால் இவர் என்னவோ துணை முதல்வர் பதவியை தந்தாராம். துணை முதல்வர் பதவி அதிகாரம் இல்லா பதவி.. டம்மி பதவி என்பதை உணர்ந்து தான் அந்த பதவி எனக்கு வேண்டாம் என்று கூறினேன். என்னை வலுக்கட்டாயமாக தான் அந்த பதவியில் இருக்க வைத்தார்கள். அந்த தேதியில் இருந்தே என்னை எப்பாற்பட்டாவது கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தான் எடப்பாடி நினைத்துக்கொண்டு இருந்தார்.
தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை தான் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.. கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.. தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்.. எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதாவும் எம்.ஜிஆரும் அதிமுகவை வழிநடத்திய விதம்.. எதிர் கொண்ட சவால்களை எல்லாம் எடுத்து சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும்.
நம்பிக்கை துரோகம்: ஜெயலலிதா எப்போது மரணமடைவார்.. நாம் எப்போது முதல்வராக முடியும் என்று காத்துக்கொண்டு இருந்து தான் .. ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர். நான் என்ன தவறு செய்தேன் என்று தான் எடப்பாடியிடம் கேள்வி கேட்கிறேன். ஒருமுறை பேட்டி கொடுக்கும் போது என்னை திமுகவுக்கு சென்றுவிட்டேன் என்று சொல்கிறார். எவ்வளவு திமிர் உங்களுக்கு. இயக்கத்துக்காக எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறேன்.
இயக்குத்துக்கு இடையூறு வரும் போது காப்பாற்றியிருக்கிறேன். யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதவன். இது எல்லாம் மக்களுக்கு தெரியும். அதேபோல் நீங்க எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள் என்றும் மக்களுக்கு தெரியும். சசிகலா தான் உங்களை முதல்வராக்கினார்.. ஆனால் 3 மாதம் கழித்து நீங்களே சசிகலாவை வசைபாடினீங்க.. இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் பேசினார்.












Click it and Unblock the Notifications