அதிரடி ஆய்வில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி.. தீபாவளி சிறப்பு ஏற்பாடு: எமர்ஜென்சி சென்டரில் விசிட்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவசரகால மேலாண்மை மையத்தில் ஆய்வு செய்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. சென்னையில் இருந்து 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவசரகால மேலாண்மை மையத்தில் இன்று ஆய்வு செய்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தீபாவளி சமயத்தில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கத்தில் முதல்வரின் உத்தரவுப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 108 அவசரகால சேவை மையத்துக்கு சராசரியாக 12 ஆயிரம் அழைப்புகள் வரும். தீபாவளி நேரத்தில் 20 ஆயிரம் அழைப்புகள் வருவது வழக்கம்.

எனவே, அவசரகால மேலாண்மை மையத்தில் 3 ஷிப்ட்களில், கூடுதலாக 50 பேர் பணியமர்த்தப்பட்டு மொத்தம் 194 பேர் அழைப்புகளை ஏற்கும் வகையில் பணியில் உள்ளனர். தீக்காயம் மற்றும் சாலை விபத்துகள் அதிகம் நடக்கலாம் என்பதால் கீழ்ப்பாக்கத்தில் கூடுதலாக 25 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த 3 நாட்களும், தடையின்றி ஆம்புலன்ஸ்களை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிக விபத்துகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 108 அவசரகால மேலாண்மை மையத்தை அழைக்க பிரத்யேகமாக 044 40000108 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அதிக சத்தம் வரக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications