வாட்டும் வெயிலுக்கு நடுவே இதமான மழை! தமிழகத்தில் வரும் நாட்களில் என்ன கிளைமேட்! வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் கடந்த பிப். மாதம் பல இடங்களில் கடுமையான வெப்பம் ஏற்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த மாதமும் தொடக்கத்தில் வெப்பம் சற்று அதிகமாகவே இருந்தது. இருப்பினும், அதன் பிறகு பெய்த மழை ஓரளவு வெப்பத்தைத் தணிக்க உதவியது.

வெப்பம்
அதேநேரம் எல்லா இடங்களிலும் வெப்பம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சில இடங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெப்ப நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 21.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி க்ளென்மார்கன் பகுதியில் 20 மிமீ மழையும், கோவை வால்பாறை. கன்னியாகுமரி கீழ் கோதையாறு, நீலகிரி கூடலூர் பஜார் பகுதியில் தலா 10 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மழை இருக்கு
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 30) மற்றும் நாளை (மார்ச் 31) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்கள்
மேலும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்து 5 நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications