பிசினஸ் டூ பாலிடிக்ஸ்! திருச்சி லோக்சபா தொகுதி எம்பி துரை வைகோ வளர்ந்தது இப்படித்தான்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி சலசலப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இவர் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
1972ஆம் ஆண்டு வைகோ, ரேணுகாதேவி தம்பதியின் மகனாக பிறந்தவர் துரை வைகோ. சென்னையில் பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஐடிசி நிறுவனத்தில் புகையிலை பொருட்களை ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகிறார். அதற்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில், ஆமாம். உண்மைதான். அவர் தான் சொந்தத் திறமையில் அங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார். எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று கூறினார் வைகோ.
வி ரியாலிட்டி எல்எல்பி என்றொரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் துரை வைகோ. கட்டுமானத்துறை தொடர்பான பிசினஸ் செய்து கொண்டிருக்கின்றார். பரம்பரை சொத்துக்கள் அதிகம் உண்டு. என்னதான் வசதியாக வளர்ந்து வந்தாலும் அவர் ஒரு காலம் வரை அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.
"என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று வைகோ கூறியிருந்தார். இது துரை வைகோவின் அரசியல் நோக்கிய நகர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.
அடுத்த சில நாட்களில் மதிமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகளில் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அரசியல் நகர்வு உட்கட்சியினராலே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. "என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள். மதிமுகவின் தலைமையகமான தாயகத்தின் பக்கம் கூட வரமாட்டார்கள்" என்று முன்பு வைகோ கூறிய வார்த்தைகள் துரை வைகோவுக்கு எதிராக திரும்பின.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் துரை வைகோ மதிமுகவின் இணைய அணியில் செயல்பட தொடங்கினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிரமாக நுழைய தொடங்கினார். இதற்கேற்றார் போல, மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொரோனா பேரிடர் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றது,கொரோனா 2வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்றது என மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணித்துக் கொண்ட துரை வைகோ, மக்களிடம் எளிதாக அறிமுகமானார்.
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு கொண்டு வந்தார் வைகோ. மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் ஆனார். இப்படியாக திருச்சி லோக்சபா தேர்தலுக்கு போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications