“தமிழ்நாடு கேட்டது ரூ.24,679 கோடி.. மத்திய அரசு கொடுத்தது ரூ.4,136 கோடி” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: "காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண்" என தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக் குழுவின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் டித்வா புயலின் கோர தாண்டவத்தால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டன என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம்.
எப்போதோ ஒருமுறை, புயல், வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை நாம் கடந்துவிட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ப தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.
கடந்த கூட்டத்தில் கூட, மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தீர்கள். அதை அடிப்படையாக வைத்து, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம்.
கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் பயனாக தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9000 ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி. அதை ஊக்குவிப்பதற்காக தான், MTC மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு குறைந்து எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால் தான், மத்திய அரசு நமக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் HTG தரவரிசையில் "Climate Action" மற்றும் "Clean Energy" ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான், நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண். இயற்கை வளப் பாதுகாப்புடன் இணைந்த வளர்ச்சி தான், எதிர்கால சந்ததிகளுக்கான உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்," என்றார்.
"புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070ஆம் ஆண்டிற்கு முன்பே, நெட் ஜீரோ இலக்கை அடைய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக கொள்கை, செயல்முறை ஆகிய இரண்டிலும் விரிவாக பணியாற்றி இருக்கிறோம். நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் 500 கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கியிருக்கிறோம். மாநில அரசின் நிதியிலிருந்தே நம்முடைய முன்னெடுப்புகள் அனைத்தையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்பது தான் மிக முக்கியமானது.
நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடு தான் மத்திய அரசு விடுவித்துள்ளது. நாம் கேட்டது 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய், அவர்கள் வழங்கியது வெறும் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மட்டும் தான். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும் வெல்லும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications