33 கோடியில் பளபள பஸ் ஸ்டாண்ட்.. பிரமாண்ட பூங்கா.. திருவள்ளூர் ஜிகுஜிகு மாற்றங்கள்..
திருவள்ளூர்: இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் வியத்தகு மாற்றங்களைக் கண்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம். ஏறக்குறைய 10 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. ரூ.33 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை 5 ஏக்கரில் கட்ட உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அத்துடன் அரசுப் பள்ளிக்கு நவீன வசதிகளோடு கழிப்பறை, தொகுதி மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து இளைப்பாற அமைதியான ஒரு பூங்கா என விழாக் கோலம் கொண்டுள்ளது திருவள்ளூர் நகராட்சி.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குப்பை மேடாக மாற்றப்பட்ட, ஸ்ரீதேவி மீனாட்சி நகர் சுமார் 30 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. தங்களின் அன்றாட நடைப்பயிற்சிக்காகத் தினம் சுமார் 3 கி.மீட்டர் நடந்தே சென்று வேறு பகுதியில் உள்ள பூங்காவைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலையை அகற்றியுள்ளது இந்த அரசு.

இந்த மாற்றம் குறித்து நம்மிடம் பேசிய நகர்மன்ற தலைவர் பொன் பாண்டியன், "1996 ஆம் ஆண்டு இந்த திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டது. அன்று முதல் எங்கள் மாவட்டத்திற்கு என்று ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பதே இல்லை. 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எத்தனையோ போராட்டம் நடத்தினோம். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நான் 2006 முதல் 2011 வரை நகர்மன்ற தலைவராக இருந்தபோது எவ்வளவோ முயன்று ஒப்புதல் பெற்றேன்.

ஆனால், அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் அதைத் தடுத்துவிட்டார். அதன்பிறகு இடம் தேர்வு செய்யும் படலம் தொடங்கியது. அதிமுக ஆட்சி கண்டுகொள்ளவே இல்லை. இப்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலுக்கா அலுவலகம் முன்பாக ஒரு பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் 2020-21 நிதியாண்டில் கட்டி தந்தார்.

அடுத்து தலைமை அரசு மருத்துவமனைப் பக்கம் ஒரு பேருந்து நிலையத்தை இப்போது கட்டி வருகிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் ரூ 33 கோடி நிதியையும் அளித்து, 5 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைக் கட்ட உத்தரவிட்டுள்ளார். இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் திருவள்ளூர் மாவட்டம் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதற்கு இந்தத் திட்டப் பணிகள்தான் சாட்சி" என்கிறார்.

உதய மலர் பாண்டியன், "நகர மன்றத் தலைவராக நான் பதவியேற்ற உடன் பொதுமக்கள் வந்து பூங்காவைச் சீரமைத்துத் தரும்படி கோரிக்கை வைத்தார்கள். கூடவே இந்தப் பூங்காவில் பெண்களுக்கு என்று ஒரு கழிப்பிடம் கட்டித்தரச் சொன்னார்கள். நான் அதைச் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சம் ஒதுக்கி, இப்போது ஒரு கழிப்பறை கட்டித்தந்துள்ளார். வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு, அவசர இயற்கை உபாதை ஏற்பட்டவர்களுக்கு இது இப்போது மிகவும் பயனுள்ளதாக உள்ளது" என்கிறார்.

"இந்த மைதானம் 2006இல் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு 2010ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு நகர்மன்ற தலைவராகப் பொன்.பாண்டியன் இருந்தார். நான் நகர்மன்ற உறுப்பினராக இருந்தேன். அன்றைய சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி. சிவாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கி, இந்தப் பூங்காவை அமைத்தோம். சுற்றுச் சுவர் அமைப்பது, நடைபாதைப் போடுவது, மரங்களை நடுவது, விளையாட்டு உபகரணங்களை வாங்குவது என்று பலவற்றுக்கும் அந்த நிதி செலவழிக்கப்பட்டது.

அதன்பிறகு இந்தப் பூங்கா கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் பாழடைந்துபோய் கிடந்தது. ஏன் என்று கேட்க நாதியில்லை. இப்போது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இதைப் புனரமைத்து கொடுத்திருக்கிறோம். மறுபிறவி எடுத்துள்ளது ஸ்ரீதேவி மீனாட்சி நகர் பூங்கா.

திருவள்ளூர் நகராட்சியிலேயே இவ்வளவு பெரிய பூங்கா வேறு எங்கும் இல்லை. அதனால்தான் பொதுமக்கள் அனைவரும் இங்கே காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வந்து குவிந்துவருகிறார்கள்" என்கிறார் இரா. விஜயக்குமார்

"இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். 2010 மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்தான் ஸ்ரீதேவி மீனாட்சி நகர் பூங்கா உருவாக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் அது அலங்கோலமானது. இப்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் அந்தப் பூங்கா, புதிய பொலிவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என்கிறார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்

தினமும் பூங்காவைப் பயன்படுத்தி வரும் ஆறுமுகம், "எங்கள் பகுதிக்கு என்று தனியே ஒரு பூங்கா அமைத்துத் தரவேண்டும் என்பது எங்கள் மக்களின் பல ஆண்டுகால கனவு. ஆனால், ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் அமைத்துத் தருவதாகச் சொல்வார்கள். தேர்தல் முடிந்த பிற்பாடு அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதுதான் இத்தனைக் காலமும் நடந்து வந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி மன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. அப்போது எங்கள் பகுதியில் போட்டியிட்ட ஹேமலதா என்பவர், வெற்றிபெற்றால் பூங்கா அமைத்துத் தருவது உறுதி என்று வாக்கு கொடுத்தார். அவர் சொன்னதைப் போலவே, ஆறே மாதங்களில் இந்த இடத்தில் பூங்காவை அமைத்துக் கொடுத்துவிட்டார்.

முன்பு எல்லாம் நாங்கள் காலையில் நடைப்பயிற்சி செய்வதற்காக 3 கி.மீட்டர் செல்வோம். விடுமுறை நாட்களில் பிள்ளைகள் விளையாட விரும்புவார்கள். அதற்காக 3 கி.மீ தாண்டி உள்ள பூங்காவுக்கு அவர்களைச் சுமந்து கொண்டு செல்வோம். ஆகவே, எங்கள் பகுதி மக்கள் மிகவும் வேதனையை அனுபவித்தார்கள்.

இப்போது எங்களுக்கு என மிகத் தரமான பூங்கா கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்ல நிழல் தரும் மரங்களுடன் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. உண்மையில் ஆறே மாதங்களில் அசுர நடவடிக்கை எடுத்த எங்களது உள்ளாட்சி நிர்வாகத்திற்கும், அதற்கு நிதி அளித்து ஒப்புதல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மிகப் பெரிய நன்றி" என்கிறார்

"கலைஞர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கி, இந்தப் பூங்காவைக் கட்டித்தந்துள்ளார்கள். இன்றைய அவசரக்கால உலகத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் கட்டாயம் ஒரு பூங்கா தேவை. நல்ல காற்றோட்டம் உள்ள பூங்காவில் கொஞ்ச நேரம் போய் உட்கார்ந்துவிட்டு வந்தாலே மனம் அமைதியாகிவிடும்.
பூங்காவில் விளையாடும்போது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். அப்படி ஒரு பூங்கா இல்லாமல் எங்கள் பகுதி மக்கள் தவித்து வந்தோம். இன்றைக்கு மிகச் சிறப்பான கட்டுமானத்துடன் பூங்காவை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இப்போது நிறைய வயதானவர்கள் இந்தப் பூங்காவுக்குத் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். அவர்கள் இத்தனை காலமும் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள். அவர்கள் அனுபவிக்கும் உணர்வை நீங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது" என்கிறார் இப்பகுதி வாசி ஒருவர். இவர் தினமும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கே நடைப்பயிற்சி செய்து வருகிறார்.

இவர் சொல்வதைப் போலக் கண்களை அதிகம் இடையூறு செய்யாதபடி மிக அழகான வண்ணங்களால் ஒளிர்கிறது இந்தப் பூங்கா. அழகான சிமெண்ட் கற்கள் தரையில் வரிசையாகப் பதிக்கப்பட்டு, வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை நடந்து செல்வதற்கு வசதியாக உள்ளது.
இந்தப் பூங்கா காலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. முற்பகல் 12 மணி வரை திறந்திருக்கும். மாலை நேரத்தில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்தே உள்ளதால், பலரும் அலுவலகம் முடித்துவிட்டு வந்து, இங்கே உட்கார்ந்து மனதை ஆசுவாசம் செய்து கொண்டு செல்கிறார்கள்.
முன்பு கட்டாந்தரையாகக் காட்சி தந்த இந்த ஸ்ரீதேவி மீனாட்சி நகர் பகுதி, இப்போது மறு உயிர் பெற்று மக்கள் கூடும் மகிழ்ச்சி மன்றமாக மாறி இருக்கிறது. கூடுதலாக இப்போது 5 நகர் பகுதி மக்கள் கூடும் களமாக மாறியுள்ளது.
லாவண்யன், "நான் ஆசிரியர் காலனி பகுதியில் குடியிருக்கிறேன். தினமும் காலையில் என் குழந்தைகளோடு இங்குதான் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். குறிப்பாகச் சனி, ஞாயிறு கிழமைகளில் என் குழந்தைகள் விளையாட இந்தப் பூங்கா தேவையான ஒன்றாக மாறியுள்ளது. விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு இங்கே குங்ஃபூ, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளை வெளியிலிருந்து சிலர் வந்து கற்றுத் தருகிறார்கள். அது மிகமிக பயன் தருவதாக உள்ளது" என்கிறார்
இதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஒன்று இயக்கிவருகிறது. அந்தப் பள்ளியில் இப்போது குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், முன்பு இருந்த கழிப்பறை போதுமானதாக இல்லை. புதிய கழிப்பறைக்கான தேவை உள்ளதாகப் பள்ளி தரப்பிலிருந்து அரசுக்குக் கோரிக்கை வந்தது. அதைக் கருத்தில் கொண்டு புதியதாக ரூ 18 லட்சம் செலவில் கழிப்பறை கட்டித்தரப்பட்டுள்ளது.
பூங்கா உருவானால் அங்கே மலர்கள் மட்டுமல்ல.. மனிதர்களின் முகத்தில் புன்னகையும் மலர்கிறது.












Click it and Unblock the Notifications