ஆலைகள் பெருகுது... வேலைகள் பெருகுது! - தொழிற்துறையில் 2 ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சி
சென்னை: 'ஈராண்டு கால ஆட்சி; இரட்டிப்பு மகிழ்ச்சி' என்ற முழக்கத்தோடு இரண்டாண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.
அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாளே, 'தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதே தனது அரசின் இலக்கு' என்று பிரகடனம் செய்தார். அந்த ஒரு ட்ரில்லியன் என்ற சொல் இந்திய அளவில் வைரலாக மாறியது.

அதை ஒரு அரசியல் முழக்கமாகச் சொல்லிவிட்டு அவர் சும்மா இருந்துவிடவில்லை. அதற்காக முஸ்தீபுகளில் உடனடியாக இறங்கினார். சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை மேம்படுத்த ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள எஸ்தர் டஃப்லோ பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பொருளாதார நிபுணர். இவர் அமெரிக்காவின் மாஸசூஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (Massachusetts Institute of Technology) பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
வறுமை ஒழிப்பு, வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகியவற்றில் தனித்தன்மை பெற்றவர். இவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். இவரைப் போலவே ஒரு சர்வதேச பொருளாதார அறிஞர் ஷான் த்ரே. அடுத்து ஜான் த்ரேவைப்.

இப்படி உலகம் அறிந்த மேதைகளை இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு நியமிப்பது இதுவே முதன்முறை. தமிழ்நாடு இதுவரை காணாத அதிசயம் இது.
இப்போது 2030க்குள் இந்த ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவதற்காக ரூட் மேப்பை தயாரிப்பதற்காக வேலையை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
சுருக்கமாகச் சொன்னால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய அரசானது எந்தளவுக்குத் தமிழகத்தை வஞ்சிக்கிறது என நுட்பமாகத் தனது பேட்டிகள் மூலம் வாதிட்டு வந்துள்ளார். அவரது பேச்சு நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இன்றைக்கு அதன் பலனாக சுமார் 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்து சாதனை செய்திருக்கிறார்.
முன்னதாக ஸ்டாலின் தன் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் மட்டுமே 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நல்ல மாற்றத்திற்கான முதல் விதையை விதைத்தார். இதுதான் இந்த ஆட்சியில் தொழிற்துறை மூலம் சொல்லப்பட்ட முதல் அதிரடி செய்தி.

இந்த இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 3,89,651 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் அரசு சார்பில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம், 2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளைத் தமிழ்நாடு பெறப் போகிறது.
மேலும், தொழிற்துறையை முன்னேற்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரியில், 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை' தமிழக அரசு நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக அரசு 100 கோடி ரூபாயைச் செலவிட உள்ளது.
தொழிற்துறை சார்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களில்கூட மாநிலத்தின் சமமான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய அம்சம். ஏறக்குறைய 85 தொழிற்சாலைகள் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் அமைய உள்ளன.

இந்தப் பரவாலான திட்டங்கள் சுமார் 1,44,028 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இதனால் 2,14,478 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இவற்றைத் தாண்டி முதலீட்டாளர்கள் பலரின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது. அதற்கான சான்றுதான் ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்'. இந்திய அளவில் தமிழ்நாடுதான் இதில் முதலிடம்.
ஒரு சின்ன நிறுவனம், அதிகளவில் வர்த்தகம் செய்து கவனம் பெறுகிறது என வைத்துக் கொள்வோம். அந்நிறுவனத்தைத் தேடிப் பிடித்து ஒரு கோடீசுவரர், அதனை மேலும் வலுப்படுத்தத் தனது நிதியை அதில் முதலீடு செய்வார். அவ்வாறு நிதியை முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனமும் வளரும், அந்த கோடீசுவரரின் முதலீட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இதையே ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்' என்கிறோம்.
இப்படியான முதலீட்டில் 2022 ஆம் ஆண்டைப் பொருத்தவரை தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இன்றைய காலத்தில் பொட்ரோல் அல்லாத வாகனங்களைப் பயன்படுத்துவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்தக் கால மாற்றத்தைத் தமிழக அரசு சரியாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. பசுமை மின் வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தை வகித்து வருகிறது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46 சதவிகிதம் வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை நாம் பெருமிதமாகச் சொல்லலாம்.
அதற்கும் காரணம் இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர மின் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில்தான் நிறுவப்பட்டுள்ளது என்கிறது அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள ஒரு புள்ளிவிவரம்.
தமிழக அரசு தொழிற்சாலை கொள்கையில்கூட புதுமையைக் கடைப்பிடித்திருக்கிறது. சமூகநீதி என்பதைச் செயல்படுத்தும் விதமாக தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு முன்னுரிமையை அளித்துள்ளது திராவிட மாடல்.
திண்டிவனத்தில் அமைய உள்ள தொழிற்சாலையில் 5,400 பெண்களும், பெரம்பலூரில் அமைய உள்ள தொழிற்சாலையில் 31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள்தரத் திட்டம் தீட்டியுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் முதல்வரால் நாட்டப்பட்டது.
மேலும் இராணிப் பேட்டையிலும் கள்ளக்குறிச்சியிலும் அமையவுள்ளன இரண்டு தொழிற்சாலைகள் மூலம் 32,000 பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெற இருக்கிறார்கள்.
விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இதனால், ஏறத்தாழ 22,000 பேர் வேலைவாய்ப்பு பெற இருக்கிறார்கள்.
இவை தவிர தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு பணிநியமன ஆணைகளை இந்த அரசு வழங்கி இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட விவரங்களில் சில எதிர்காலத்திற்கானவை. இவற்றுக்கு முன்னதாகவே ஐபோன் தயாரிப்பில் கோலோச்சி வரும் தைவானைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையைத் தொடங்கிவிட்டது.
சுமார் ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்துள்ளனர் என்பது இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி.












Click it and Unblock the Notifications