பூதாகரமாகும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு.. உடனடியாக ஸ்பாட்டிற்கு செல்லும் டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் பூதாகரமாகி உள்ள நிலையில், தமிழக அரசு பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள கனியாமூரில் தனியார்ப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்
இருப்பினும், பள்ளி நிர்வாகம் கூறுவதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இரு ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வன்முறை
வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் 5 நாட்களாகத் தொடரும் நிலையில், இன்று போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளியில் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றதில் வன்முறை ஏற்பட்டது.

பரபரப்பு
போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள், பள்ளி உள்ளே புகுந்து பள்ளி பேருந்துகளையும் அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமைதியற்ற சூழல் உருவாகி உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பாட்டிற்கி விரைந்த டிஜிபி
இதனிடையே கள்ளக்குறிச்சியில் வன்முறை ஏற்பட்டுள்ள சூழலில், நிலைமையைக் கட்டுப்படுத்த முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் உள்துறைச் செயலாளரும், போலீஸ் டிஜிபியும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர். வன்முறை தொடரும் நிலையில், கூடுதல் போலீஸ் படை உடன் போராட்டத்தைக் கலைக்கத் தேவையான நடவடிக்கைகளை டிஜிபி சைலேந்திர பாபு எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

முக்கிய அதிகாரிகள்
அதேபோல மாணவியின் உயிரிழப்பு குறித்தும் அங்கு நிலவி வரும் சூழல் குறித்தும் உள் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆய்வு செய்து தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்ல உஷாவும் உடன் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றதும் நிலை சற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications