லாஸ்ட் வார்னிங்! “இதுதான் கடைசி.. இன்னொருவாட்டி நடந்தா..” - போலீசாருக்கு டிஜிபி அதிரடி உத்தரவு!
சென்னை : பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.ஜி.பி சைலேந்திர பாபு போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லாக்கப் மரணம், பொதுமக்களை போலீசார் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது, பொதுமக்களிடையே காவல்துறையினர் மீதான நல்லெண்ணத்தைச் சிதைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், போலீசார் தாக்கியதால் பாதிக்கப்பட்டவருடன் நேற்று முன் தினம் போனில் பேசி விசாரித்த டிஜிபி சைலேந்திர பாபு, போலீசாருக்கு முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

கோவை சம்பவம்
கோவை நீலாம்பூர் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் மோகனசுந்தரம் என்பவரை தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து அந்த அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். போலீஸ்காரர் ஒருவர் ஸ்விகி ஊழியரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போனில் பேசிய டிஜிபி
இதையடுத்து, போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி நிறுவன ஊழியர் மோகனசுந்தரத்திடம் தொலைபேசியில் பேசி டிஜிபி சைலேந்திரபாபு நலம் விசாரித்தார். அப்போது, போக்குவரத்து காவலர் சதீஷ் மீது கிரிமினல், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் டிஜிபி விளக்கம் அளித்தார். தாக்குதலுக்கு உட்பட்ட ஊழியரை தொடர்பு கொண்டு ஆறுதலாக டிஜிபி பேசியதற்காக பலரும் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

லாக்கப் மரணம்
முன்னதாக, கடந்த மாதம் சென்னையில் நள்ளிரவில் போலீசாரின் வாகன சோதனையில், விக்னேஷ் என்ற இளைஞர் சிக்கி, போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தார். போலீசார் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றங்களில் ஈடுபட்டவர்களை, காவல் நிலையங்களில் மாலை 6 மணிக்குள் விசாரிக்க வேண்டும் என்றும் போலீஸ் விசாரணை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.

அராஜகம்
இந்நிலையில், மீண்டும் போலீசாரின் அராஜக செயல்கள் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு புகார்கள் தொடந்து வரும் நிலையில், போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும், இனி யாரையும் துன்புறுத்தவோ தாக்கவோ கூடாது என்றும் போலீசாருக்கு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

லாஸ்ட் வார்னிங்
இதுகுறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போலீஸ்காரரும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். எவரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. கோவை சம்பவம் கடைசியாக இருக்கட்டும். இனி சட்டத்தை மீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications