மொத்தம் 6 சேலஞ்ச் வந்தது.. சூப்பரா கலக்கிட்டீங்க.. லிஸ்ட் போட்டு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் நடந்த 6 முக்கியமான நிகழ்வுகளில் தமிழக போலீசாரின் பணிகளைப் பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடந்த சில எதிர்பாராத சம்பவங்கள், சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுக்கும் வகையிலான சில நிகழ்வுகளில் திறமையாக செயல்பட்டதாக கூறி காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், தேவர் குருபூஜை, மருது சகோதரர்கள் பிறந்த நாள், இமானுவேல் சேகரன் நினைவு நாள் ஆகிய நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பி.எஃப்.ஐ அமைப்பு தடை, தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு ஆகிய சம்பவங்களிலும் போலீசார் சிறப்பாகப் பணியாற்றியதாக சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சவால்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து காவல்துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல்துறை எஸ்பிக்கள், மற்றும் காவல் நிலையங்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், "தமிழ்நாடு காவல்துறை கடந்த சில மாதங்களில் பெரும் சவால்களை சிறப்பாகக் கையாண்டது. விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாகவும், அமைதியாகவும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டு அமைதியை நிலை நாட்டியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இந்தச் சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்புப் பணிகளை துரிதமாக கையாளும் திறனில் ஓர் உயர்ந்த அளவீட்டினை எட்டியது நம் காவல்துறை. இமானுவேல் சேகரன் நினைவு நாள், மருது சகோதரர்கள் பிறந்த நாள் நிகழ்வுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்நிகழ்சிகள் சிறப்புற நடைபெற காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

கோவை கார் வெடிப்பு சம்பவம்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஒரு வாகனம் வெடித்தது. அதில் இருந்த நபரும் இறந்தார். தீபாவளி முந்தைய நாளான அன்று அந்த நிகழ்வில் அனைத்து தடயங்களையும் திரட்டி இறந்த நபரை அடையாளம் கண்டு, ஆறு முக்கிய குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது நமது காவல்துறை. இந்தச் சம்பவத்தை அறிவுப்பூர்வமாகவும், துரிதமாகவும், பொறுப்புணர்வுடனும் கையாண்டதால் தீபாவளி பண்டிகை எந்தப் பதட்டமும் இல்லாமல், கோலாகலமாக கொண்டாடச் செய்தது தமிழ்நாடு காவல்துறை. கோவையில் கார் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறப்பாக கையாண்ட போலீஸ்
தேவர் ஜெயந்தி விழாவில் சுமார் 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெறச் செய்தார்கள். அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும், சவால்களையும் கடந்த சில மாதங்களாக திறம்பட கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து வீரத்துடனும், விவேகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடமையாற்ற வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications