மருத்துவ காப்பீடு திட்டம்.. காவலர்களுக்கு குட் நியூஸ்.. டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 'புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021' கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்
2025-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமலில் இருக்கும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். மேலும் அரிய வகை சிகிச்சை, அறுவை சிகிச்சை வேண்டுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். அதற்காக, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
இந்த நிலையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து காவலர்களுக்கும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கை:புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021 வசதியை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் பெறலாம். இதன்மூலம் 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும்.

மருத்துவமனைகளின் விவரங்கள்
அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு 20 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். இது நிதித்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயன்களை பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 1,169 மருத்துவமனைகளின் விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பு பலகை
இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள 1800 233 5666 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதன் விவரங்களை அனைத்து காவலர்களுக்கும் தெரியும் வகையில் காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications