ஓபிஎஸ் vs எடப்பாடி.. தர்மயுத்தம் பார்ட் 2? தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு
Recommended Video
சென்னை: அதிமுகவில் தர்மயுத்தம் பார்ட்-2 ஆரம்பித்துள்ளதை, ராஜன் செல்லப்பாவின் பேட்டி வெளிப்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பிற 37 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.
இந்த தோல்விக்கு பிறகு அதிமுக கட்சிக்குள் பல சீனியர் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் லோக்சபா தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மோடி எதிர்ப்பு அலையிலும் கூட நீந்தி வெற்றி பெற்றுள்ளார்.

பன்னீர் செல்வம் செல்வாக்கு
இதன் மூலமாக பன்னீர்செல்வம்தான் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர், எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்ற கருத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நடுவே வேகமாக பரவி வருகிறது. இதனால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் நடுவே விரிசல் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

ஜெ. நினைவிடம்
இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பாக மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மகன் ரவீந்திரநாத்துடன், பன்னீர்செல்வம் சென்றார். அப்போது அமைச்சர் உதயகுமார் தவிர தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் வேறுயாரும், ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. எனவே, இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது. பன்னீர்செல்வம் மகன் மட்டும் வெற்றி பெற்றதை, எடப்பாடி தரப்பு அவ்வளவாக ரசிக்கவில்லையோ, என்ற ஐயப்பாட்டை இந்த நிகழ்வு தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

தர்மயுத்தம்
ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சசிகலா அந்த பதவியில் அமர முடிவு செய்த போது, திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் செய்தார் பன்னீர்செல்வம். அதை தர்மயுத்தம் என அழைத்தார். இதே போன்ற ஒரு சூழ்நிலை தான் தற்போது அதிமுகவில் பன்னீர்செல்வத்திற்கு நிலவுவதாகவும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு பன்னீர்செல்வமும், அவரது மகனும் சென்றபோது பேச்சுகள் எழுந்தன. பரபரப்பு கூடியது.

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு
இன்று, மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அளித்த பேட்டி இதை உறுதி செய்வதாக உள்ளது. அதிமுகவில், இரட்டை தலைமை இருக்கக்கூடாது. மக்கள் ஆதரவு பெற்றவர், அதிமுக பொதுச் செயலாளராக இருக்க வேண்டும். ஜெயலலிதா அங்கீகரித்தவர்தான் அந்த பதவிக்கு வரவேண்டும் என்றெல்லாம் ராஜன்செல்லப்பா தெரிவித்தார். இவை அனைத்துமே ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியவைதான், என்பது அரசியலில் பாலபாடம் படித்தவர்களுக்குக் கூட புரியக்கூடிய சமாச்சாரம்தான்.

தர்மயுத்தம் -2
ரவீந்திரநாத்துடன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்களும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லவில்லை என்பதையும் ராஜன்செல்லப்பா குறிப்பிட்டு கூறியதை வைத்து பார்க்கும்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன், ஜெயலலிதா நினைவிடம் சென்றது, தர்மயுத்தம் இரண்டாம் பாகத்தை துவங்குவதற்கு தானோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

பிளவு அதிகரிப்பு
பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக ராஜன் செல்லப்பா அளித்துள்ள பேட்டி, எடப்பாடி மற்றும், பன்னீர்செல்வம் அணிகள் நடுவேயான பிளவை அம்பலப்படுத்திவிட்டது. இனி வரும் நாட்களில், அதிமுகவில் நடைபெறப்போகும், தர்மயுத்தத்திற்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications