''ஏன்யா.. உங்களுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?'' அண்ணாமலை மீது தயாநிதி மாறன் பாய்ச்சல்!
சென்னை: கர்நாடகாவுக்கு யார் செல்ல வேண்டும் யார் செல்லக் கூடாது என அண்ணாமலை முடிவெடுக்க முடியாது எனக் கூறிய தயாநிதி மாறன் எம்.பி., ''ஏன்யா.. உங்களுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?'' என தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த மாதம் வரை கர்நாடகாவில் முகாமிட்டு கன்னடத்தில் பேசி பாஜகவுக்கு ஓட்டுக்கேட்டவர் அண்ணாமலை என்றும் அரசியலுக்காக அவர் மேகதாது விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சிக்கிறார் எனவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, மேகதாது அணை பிரச்சனையாக இருந்தாலும் சரி சுமூகமாக பக்குவமாக பேச வேண்டிய விவகாரம் என்றும் அதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதன் மூலம் மக்களுக்கு தான் இழப்பு ஏற்படும் என்பதை அண்ணாமலை சிந்திக்க வேண்டும் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருப்பவர்களும் விவசாயிகள் தான் இங்கே இருப்பவர்களும் விவசாயிகள் தான் என்றும் அதனால் அரசியலை பின்னுக்கு தள்ளி நல்ல முறையில் இவ்விவகாரத்தை முதல்வர் கையாள்வார் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல மேகதாது அணை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கப் போகிறது என்றும் விவசாயிகள் பிரச்சனையை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் இது தான் சட்டம் எனவும் எடுத்துக்கூறிய தயாநிதி மாறன், ஒரு கட்டத்தில் போதுமா என கேட்டுவிட்டு பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications