இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த விளையாட்டு வீரர் தோனி.. பாஜக ஆதரவாளர் கருத்தால் ஆவேசமான ரசிகர்கள்
சென்னை: நான் பார்த்ததிலேயே இந்தியாவின் ஊழல் நிறைந்த விளையாட்டு வீரர் தோனிதான் என பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்கியுள்ளன.
முழு ஏலத்துக்கு பிறகு உருமாறிய கிரிக்கெட் அணிகளுடன் இந்த போட்டி நடந்து வருவதால் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து இந்த தொடர் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

ஏமாற்றமளித்த சென்னை
குறிப்பாக இந்த தொடரில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி அதிலிருந்து விலகி ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இப்போட்டியில் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்தது.

மீண்டும் தோனி கேப்டன்
8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்று 9 வது இடத்தில் உள்ளது. இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேட்பன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவித்ததால் தோனி மீண்டும் கேட்பன் பொறுப்பேற்றார். இதனால் தோனி ரசிகர்களும் சென்னை ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

பழைய பார்மில் தோனி படை
இதையடுத்து தோனி தலைமையிலான சென்னை அணி இன்று வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மிகச்சிறப்பாக ஆடி 202 ரன்களை குவித்தது. முந்தைய போட்டிகளில் சொதப்பிய ருத்ராஜ் கெய்க்வாட் 99 ரன்களை விளாசினார். மற்ற வீரர்களும் ஒரே போட்டியில் பார்முக்கு திரும்பி போல் தூள் கிளப்பினர்.

கிஷோர் கே சாமி
இதுகுறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி ட்விட்டரில் தோனியை விமர்சித்து கருத்திட்டுள்ளார். "நான் பார்த்ததிலேயே இந்தியாவின் ஊழல் நிறைந்த விளையாட்டு வீரர் தோனிதான்." என அவர் தெரிவித்துள்ள கருத்து தோனி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கிஷோர் கே சாமிக்கு எதிராக கருத்துக்கள பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக முன்னாள் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் கருத்திட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் கிஷோர் கே சாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications