ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. போகிற போக்கில் "அவரை" சீண்டிய விஜய்.. அடித்து சொல்லும் எம்பி.. ட்விஸ்ட்
சென்னை: நேற்று நடந்த மாணவர்கள் பாராட்டு விழாவில் நடிகர் விஜய் ஆளுநர் ஆர். என் ரவியை மறைமுகமாக சீண்டியதாக விவாதம் ஒன்று இணையத்தில் எழுந்துள்ளது.
12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11.30 மணி வரை நடந்தது. அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.

படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார்.
இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆளுநர் சீண்டல்: இந்த நிலையில் நேற்று நடந்த மாணவர்கள் பாராட்டு விழாவில் நடிகர் விஜய் ஆளுநர் ஆர். என் ரவியை மறைமுகமாக சீண்டியதாக விவாதம் ஒன்று இணையத்தில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் சு வெங்கடேசன் செய்துள்ள போஸ்டில், ஆளுநர் சட்டமன்றத்தில் உச்சரிக்க மறுத்த தலைவர்களின் பெயர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர்.
நேற்று தனது கல்விவிழாவில் இவர்கள் மூவரைப் பற்றியும் படிக்கச் சொல்லியுள்ளார் திரைக்கலைஞர் விஜய். ஆளுநரை காலம் மாற்றும், பேரறிவை நூல்கள் ஊட்டும் என்று கூறி உள்ளார்.
தொடக்க உரை: இந்த வருட தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை பேசாமல் சுயமாக சில விஷயங்களை பேசியது சர்ச்சையானது. சுயமாக அரசு உரையை வெட்டி ஒட்டி அவர் பேசி உள்ளதாக புகார் வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானமும் கொண்டு வந்து, அவரின் உரையை அவர் குறிப்பில் இருந்து நீக்கவும் செய்துள்ளார். ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார்.
ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.
இந்த விஷயம் அப்போது பெரிய சர்ச்சையான நிலையில் தற்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications