நடுங்கிய நந்தனம்.. செக்யூரிட்டிகளை கழற்றிவிட்டு தனியாக போன பாஜக தலைகள்.. ரகசிய மீட்.. ஆ அவருடனா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில் நள்ளிரவில் பாஜக தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம். விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர்.
இந்த நிலையில்தான் நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்
எங்கே போனார்கள்: நேற்று இந்த கூட்டத்தை நடத்திய பின், நள்ளிரவில் பாதுகாப்பு வாகனங்களை பாதிவழியிலேயே கழற்றிவிட்டு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தனத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கமலாலயம் சென்று 1 மணி நேரம் காத்திருந்தது பாதுகாப்பு வாகனம். பாதுகாவலர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் கடைசியில் கமலாலயம் சென்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் இல்லத்தில் இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாகவும், அந்த சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி: 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி, பாஜக கூட்டணியையும் விரும்புகிறார்கள்.
என்ன காரணம்?: பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட அடம் பிடிக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் தான் அன்புமணி கோரிக்கை வைக்க உள்ளாராம்..
ராமதாஸ்: ஆனால் அன்புமணியின் இந்த திட்டத்தை ராமதாஸ் விரும்பவில்லையாம். பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டில் பாமகவிற்கு மரியாதை குறையும். அதனால் பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக முடிக்க பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications