காணாமல் போனதாக கூறப்பட்ட எம்.எல்.ஏவை ஓவர் நைட்டில் கண்டுபிடித்த ஆளுநர் அர்லேகர்.. என்ன நடந்தது?
சென்னை: ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவைத் திரட்டுவதற்கு திணறி வந்த தவெக, டிடிவி தினகரனின் அமமுக கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் ரகசியமாக கையெழுத்துப் பெற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது அல்லவா? காணாமல் போன எம்.எல்.ஏ.வை ஆளுநர் அர்லேகர் தான் மீட்டுக் கொடுத்துள்ளார் என்கிறது சென்னை லோக் பவன் வட்டாரம்.
ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கொடுத்த ஆதரவு கடிதத்தில் அமமுக எம்.எல்.ஏ.காமராஜின் பெயரும் இருந்தது. அவர் கொடுத்த ஆதரவு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த இணைப்பு பொது வெளியில் அம்பலானதும், அதை பார்த்து அதிர்ந்து போன டிடிவி தினகரன், ஆளுநரை சந்தித்து, எங்கள் எம்.எல்.ஏ.வை காணவில்லை. அவர் கொடுத்ததாக காட்டப்படும் கடிதம் போலியானது. அதிமுகவை ஆதரித்து அவர் கொடுத்த ஒரிஜினல் கடிதம் இதுதான். தவெக கட்சியினர் எங்கள் எம்.எல்.ஏ.வை கடத்தி விட்டனர். அவரை கண்டுபிடித்து கொடுங்கள் என்று புகார் வாசித்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசிய ஆளூநர், தினகரன் புகார் குறித்து விவரித்துவிட்டு, இன்று இரவுக்குள் அந்த எம்.எல்.ஏ. லோக் பவனில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். இது குறித்து தேடுதல் பணிகளை உளவுத்துறை மூலம் முடுக்கி விட்டார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர். அடுத்த 1 மணி நேரத்தில் காமராஜ் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த புதுச்சேரி ரெசார்ட்டில் இருந்தார் காமராஜ். உடனடியாக அவரை சந்தித்த உளவுத்துறையினர், ஆளுநரின் உத்தரவையும், தினகரன் கொடுத்துள்ள புகாரையும் விவரித்து, நீங்கள் பேசாமல் வெளியே வாருங்கள். ஒத்துழைப்பு தந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. பிரச்சனை செய்தால், முறைப்படி உங்களை கைது செய்ய வேண்டியதிருக்கும் என்று ஒருவித தொணியில் பேசியுள்ளனர். இதனை அடுத்து உளவுத்துறையினருடன் வெளியே வந்த காமராஜை, வெளியே காத்திருந்த போலீஸ் காரில் ஏற்றிக்கொண்டு விரைந்தனர். லோக் பவனுக்கு அழைத்துச் சென்று ஆளூநரிடம் ஆஜர் படுத்தினர்.
அப்போது, அவரிடம் என்ன நடந்தது என விரிவாக விசாரித்தார் ஆளூநர் அர்லேகர். அந்த விசாரணையில்தான் பல விசயங்கள் லோக் பவனுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரித்தபோது, புதுச்சேரியில் நான் இருப்பதை தெரிந்து என்னை தவெகவினர் அப்ரோச் செய்தனர். கொஞ்ச நேரம் வெளியே வாருங்கள். உங்களிடம் பேசிவிட்டு அனுப்பி வைத்து விடுகிறோம் என சொல்லி வெளியே அழைத்து வந்தனர். வெளியே நின்றிருந்த காரில் ஏற்றி வெகு தூரத்துக்கு அழைத்து சென்றார்கள்.
தவெக தான் ஆட்சி அமைக்கப் போகிறது. என்ன முட்டி மோதினாலும் அதிமுக ஆட்சி அமைக்கப் போறதில்லை. உங்கள் ஓட்டு மதிப்பில்லாமல் போவதற்கு பதில், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் உங்களுக்கு கிடைக்கிறது கிடைக்கும். எங்கள் ஆட்சியில் நீங்கள் எதிர்பார்ப்பதும் நடக்கும். விஜய்யின் நட்பும் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி ஆதரவு கேட்டார்கள். நானும் அதில் மயங்கி அவர்கள் நீட்டிய கடிதத்தில் கையெழுத்துப் போட்டேன் என ஆளுநரிடம் ஒப்புவித்திருக்கிறார். அதன் பிறகு, தினகரனை அழைத்து காமராஜை அவரிடம் ஒப்படைத்தது லோக் பவன் என்று தெரிவிக்கின்றனர்.
குதிரை பேரம் நடந்ததை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி தந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மீது ஆளுநர் நினைத்தால் தவெக ஆட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்பாரா? என்று தான் திமுகவும் அதிமுகவும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications