சட்டம் 355.. தமிழ்நாடு சட்டசபையை முடக்கும் ஆளுநர் ரவி? அமித் ஷாவுடன் பேச்சு? கவனிக்கும் ஸ்டாலின்
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் சந்திப்பில் அரசியலமைப்பின் 355-வது சட்டப்பிரிவு அலசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர். ஆர். என் ரவிக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிராக புகார்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதிய நேரம்தான் அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த கடிதத்தை சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ளார். சனிக்கிழமைதான் ஆளுநர் ஆர். என் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். அந்த ஆலோசனைக்கு இடையில்தான் அதே நேரம் பார்த்து ஸ்டாலின் இங்கே இருந்து டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சனிக்கிழமை நடந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் சந்திப்பில் அரசியலமைப்பின் 355-வது சட்டப்பிரிவு அலசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 355-வது பிரிவு என்பது அசெம்ப்ளியை சஸ்பெண்ட் செய்வது குறித்து பேசுகிறது.
பேரவையை முடக்கி வைக்க வேண்டுமானால் ஜீரணிக்க முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். அல்லது மாநிலத்தில் அசாதாரணமான சூழல் இருக்க வேண்டும். செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது, இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்குமான மோதல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது.
செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் எழுதிய கடிதத்தை அடுத்து சட்ட சர்ச்சைகளும் உருவெடுத்தன. இந்த நிலையில்தான், 6 நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, அமித் சாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழக அரசு குறித்து நிறைய விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை பெற்றப்பிறகே செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி கவர்னர் உத்தரவிட்டார் என்பதால் நீக்கம் குறித்து இந்த சந்திப்பில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை அழுத்தமாக வாதிட்டுள்ளார் கவர்னர். 355-வது பிரிவை பயன்படுத்தி மாநில சட்டப் பேரவையை சஸ்பெண்ட் (முடக்கம்) செய்யலாம் என கவர்னர் சொல்லியிருக்கிறார்.
ஆனால், 355-வது பிரிவை பயன்படுத்துகிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதற்கான சம்பவங்கள் பெரிய அளவில் இல்லையே? என சொல்லியிருக்கிறார் அமித் ஷா. 355-ஐ பற்றி இந்தளவுக்கு மட்டுமே விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் தான் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 நாள் பயணத்தில் இன்னொரு ஸ்பெசல் செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது, டெல்லியில் புது வீடு ஒன்று கட்டி வருகிறாராம் ஆளுநர் ரவி. அதன் இறுதிக்கட்ட பணிகளை கவனிக்கவே இந்த பயணத்தின் மற்றொரு நோக்கம் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. அமித்சா - ரவி சந்திப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், 355-வது பிரிவு ஆகியவைகள் விவாதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததினால்தான், சட்டம் ஒழுங்கு குறித்து மாநில காவல்துறை உயரதிகாரிகளுடன் இன்று விரிவாக ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications