குழந்தை உள்ள ஜோடிக்கும் மீண்டும் திருமணம் நடத்தி வைத்தாரா அண்ணாமலை.. கிளம்பிய பரபரப்பு
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று முன் தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில ஜோடிகள் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளவர்கள் என விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக கட்சி பொதுக்கூட்டங்களிலும் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் என படு பிசியாக இருக்கும் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தற்போதே ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். இந்த நிலையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி அண்ணாமலை பிறந்த நாளாகும். அண்ணாமலை பிறந்த நாளை பாஜகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடினர்.

பல இடங்களில் போஸ்டர்களையும் அடித்து இருந்தனர். சமூக வலைத்தளங்களில் அண்ணாமலைக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், அண்ணாமலையின் 39-வது பிறந்த நாளை அவரது கட்சியினர் வெவ்வேறு விதமாக கொண்டாடி வருகிறார்கள். அண்ணாமலை பிறந்த நாள் நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளை சார்பாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
39 ஜோடிகளுக்கு திருமணம்: நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்று புது மண ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இங்கே இருக்கும் அனைவருமே எங்கோ பாக்கியம் செய்திருக்கிறோம். ஆண்டவனின் விதி நம்மை இங்கு ஒன்றாக சேர்த்து இருக்கிறது. 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க பெரிய மனசு வேண்டும். திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வில் மறக்க முடியாதது நாளாகும்.
எனது பிறந்த நாளை நான் கொண்டாடுவது இல்லை. என்னுடைய பிறந்த நாளில் இந்த திருமண நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், நான் உகந்த நாளாக பார்த்து திருமணம் நடத்துங்கள், நாங்கள் அனைவரும் வருகிறோம் என்று கூறினேன்" என்றார். பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருக்கும் ஹரிகிருஷ்னன் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்கனவே திருமணம் ஆனவர்கள்: திருமணம் நடத்தி வைக்கப்பட்ட 39 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கத்தில் தாலி, உதவித்தொகை ரூ.25 ஆயிரம், மணமக்களுக்கான உடைகள் ஆகிய ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால், இதில் கலந்து கொண்ட திருமண ஜோடிகள் பலரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்ற சர்ச்சையும் கிளம்பியது. அதிலும் சிலருக்கு குழந்தைகளே இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல், நேற்று முன் தினம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி, மறுநாளே தனியார் மண்டபம் ஒன்றில் தங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடியதாகவும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும் விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது.
அதுபோக இன்னும் சில ஜோடிகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கிடைக்கும் உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்டவற்றைகளுக்காக ஜோடிகளே உண்மையை மறைத்து பங்கேற்றார்களா? அல்லது அவசர கதியில் புது மண ஜோடிகள் கிடைக்காமல் திருமணம் ஆனவர்களை தெரிந்தே அழைத்து வந்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications