அவசர அவசரமாக ஓடிய உதயநிதி.. கலெக்டர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு.. எல்லாத்துக்கும் காரணம் "அது"வா?
சென்னை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையிலிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை, ஊரக உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அது என்ன? அந்த உத்தரவின் பின்னணி என்ன? என்பது குறித்து நமக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் பெருத்த கவனத்தை பெற்று வருகிறது. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததுமே, என்ன துறை ஒதுக்கப்படும்? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன..

யூகங்கள்: எப்படியும், பொதுப்பணித்துறை உதயநிதிக்கு வழங்கப்படலாம் அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றெல்லாம் யூகங்கள் வெடித்தன.
ஆனால், திடீரென விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது.. அவ்வளவாக பிரபலமாகாத விளையாட்டு துறையை ஒதுக்கினால், அதை மக்களிடம் தன்னால் பிரபலப்படுத்தி சாதிக்க முடியும் என்று உதயநிதியே அதிகமாக நம்பியதுதான் இதற்கு காரணம்.. மேலும், இந்த துறையில் இளைஞர்களையும் வெகுவாக இழுக்க முடியும் என்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தார்.
முதல்வர் பெருமிதம்: அவர் நினைத்தபடியே, இந்த துறையில் சிறப்பு கவனத்தை செலுத்தி வருவதுடன், பலராலும் ஈர்க்கப்படும் துறையாக திரும்பி பார்க்க வைத்தும் வருகிறார்.. உதயநிதியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலினே ஒருமுறை புகழ்ந்து பேசியிருந்தார்..
"விளையாட்டு வீரர்களோடு எப்போதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். விளையாட்டு துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது" என்று பாராட்டு தெரிவித்திருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.
புதிய அறிவிப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான், நடப்பு நிதியாண்டிற்கான (2023-24) பட்ஜெட் கூட்டத் தொடரில், மானியக் கோரிக்கையின்போது, பல்வேறு அறிவிப்புகளை செய்திருந்தார் உதயநிதி.. அதில் மிக முக்கியமானது, "நம்ம ஊரு விளையாட்டுத் திடல்" என்ற அறிவிப்பு மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது.
அதாவது, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்விதுறையுடன் ஒருங்கிணைந்து அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்கிற திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்த திட்டமானது, விளையாட்டின் மீதும் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை கொண்ட இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான செயல்திட்டங்களை துறையின் அதிகாரிகள் கவனம் செலுத்தாமலே இருந்தனர். இந்த விஷயம் உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அதை கேட்டு கொந்தளித்துவிட்டாராம்.. எதற்காக இந்த மெத்தனம்? என்று அதிர்ச்சியுடன் கேட்டாராம்.
சீரியஸ் விஷயம்: பிறகு, அது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த வாரமே, தன்னுடைய அதிகாரிகளிடம் நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார்.. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை சீரியசாக எடுக்க வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்டாக உத்தரவு போட்டாராம் உதயநிதி.
இதனையடுத்துதான், உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் சீரியஸ் காட்டியிருக்கிறார்கள்.. இதனைத் தொடர்ந்தே, மாவட்ட கலெக்டர்களுக்கும், பள்ளிக் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் முதன்மை செயலாளர்களுக்கும் விளையாட்டுத்துறையின் துணை செயலாளர் ராமநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதிரடி உத்தரவு: அந்த உத்தரவில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், "நம்ம ஊரு விளையாட்டுத் திடல்" அமைக்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானங்களை அமைப்பதர்கான உரிய நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த நாடாளுமன்றதேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவது, இளைஞர்களிடம் திமுகவுக்கான ஆதரவை பெற்றுத் தருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கண்ணோட்டத்திலேயே, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம் உதயநிதி..
அப்படியிருக்கும்போது, தான் பெரிதும் எதிர்பார்க்கும் திட்டத்திலேயே, "சுணக்கம்" இருப்பது தெரிந்துமே, அந்த திட்டத்தை விரைவுபடுதும் முயற்சியில் இறங்கிவிட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications