"பூனைக்குட்டி வெளியே வந்தது".. என்னை துணை முதல்வராகச் சொன்னது பிரதமர் மோடி.. ஓபிஎஸ் ஒரேபோடு
ஓபிஎஸ் பிரதமர் மோடி குறித்து தன்னுடைய பேட்டியில் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்
சென்னை: "துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும், பிரதமர் அழுத்தம் கொடுத்ததால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றேன்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே பற்றிக் கொண்டு எரியும் அதிமுகவில், ஓபிஎஸ் சொன்ன இந்த விவகாரம் பாஜகவையும் சேர்த்து டென்ஷனாக்கி வருகிறது.
பொதுச்செயலாளர் பதவி விவகாரம் அதிமுகவில் வெடித்து கிளம்பி உள்ளது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பினர் வெளிப்படையாகவே அதிருப்திகளை கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.
ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி மறுபக்கமும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான ஆதரவுகள் கிடைத்து வருவதாக தெரிகிறது.

மெஜாரிட்டி
இப்போது இரு தரப்புமே அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக அவர்கள் வீடுகளில் பேசி வருகின்றனர்.. வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில், அதற்குள் ஒரு முடிவை ஆலோசித்து எடுக்கவும் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள்.. ஒற்றை தலைமையைக் கொண்டு வர வேண்டும் என்று மெஜாரிட்டி தரப்பினர் கருத்தை முன்வைக்க, அந்த கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல், திருப்தியும் இல்லாமல் முடிந்திருக்கிறது..

அழுத்தம்
பேச்சுவார்த்தைகளும் தனித்தனியாக தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒற்றை தலைமை குறித்து பேசி கொண்டே வந்தவர், "துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும், பிரதமர் அழுத்தம் கொடுத்ததால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றேன்" என்ற ஒரு விஷயத்தை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார்.. ஓபிஎஸ் இவ்வாறு சொன்னது அதிமுகவுக்கு மட்டுமல்லாமல், பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சோஷியல் மீடியா
எடப்பாடி பழனிசாமியை ஒருவேளை, தலைவராக தேர்ந்தெடுத்தால், ஓபிஎஸ் என்ன செய்வார்? என்ற யூகங்கள் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகின்றன. காரணம், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, எடப்பாடியை தலைவராக அறிவிப்பது அவ்வளவு எளிது கிடையாதுதான்..அதேபோல, ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை நடத்தவும் முடியாது என்பதும் ஏற்கக்கூடிய விஷயமே.. ஏனெனில் டெல்லியின் சப்போர்ட் மொத்தத்தையும் ஓபிஎஸ் தன்வசம் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

சீனியர்கள்
அதனால், எடப்பாடியிடம் கட்சி சென்றுவிட்டால், ஓபிஎஸ் நிச்சயம் பிரச்சனை செய்வார் அல்லது விஷயத்தை டெல்லிக்கு கொண்டு செல்வார் என்றே கணிக்கப்பட்டு வந்தது.. அதற்கேற்றார்போல், இப்போது பிரதமர் மோடியை, தன் பேட்டியில் கொண்டு வந்து பேசியுள்ளார்.. ஒரு உட்கட்சி விவகாரத்தில், மாற்று கட்சி தலைவரின் பெயரை பயன்படுத்தி பேசுவது அவ்வளவு சரியில்லை.. அதுவும் இல்லாமல் இந்த நாட்டின் பிரதமரை, உட்கட்சி பூசலுக்கு சாட்சியாக உள்ளே கொண்டு வருவது, ஓபிஎஸ் போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகா? என்ற கேள்வி எழுகிறது.

கன்ட்ரோல் யாரிடம்?
ஓபிஎஸ் - இபிஎஸ் இவர்களுக்குள் எப்போது பஞ்சாயத்து வந்தாலும், டெல்லிக்கு கிளம்பி செல்வார்கள்.. மேலிடத்தில் அனைத்தையும் கொட்டுவார்கள்.. ஆனாலும், இவர்கள் 2 பேரின் பிரச்சனைகளை, டெல்லி தலைவர்கள் பெரிதுப்படுத்தியதும் இல்லை, ஊக்கப்படுத்தியதும் இல்லை.. மாறாக, "ஒன்றாக இணைந்து செயல்படுங்கள், அப்போதுதான் திமுகவை எதிர்க்க முடியும்" என்ற அறிவுரையை மட்டுமே மேலிட தலைவர்கள் சொன்னதாக, இதுவரை செய்திகள் கசிந்துள்ளன.. ஆனால், "அதிகாரமே இல்லாத, துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி" ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் பிரதமர் சொல்ல காரணம் என்ன?

நெருக்கம்
பாஜகவின் அபிமானி என்பதால், பிரதமர் தமக்கு அவ்வாறு "ஆலோசனை" தந்தார் என்று ஓபிஎஸ் சொல்லி இருந்தால்கூட பரவாயில்லை.. தனக்கு பிரதமர்"அழுத்தம்" தந்தார் என்றே வார்த்தையை ஓபிஎஸ் பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சிகரமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் நெருக்கமானவர் ஓபிஎஸ் என்பது தெரிந்த விஷயமே என்றாலும், அழுத்தம் தரும் அளவுக்கு பிரதமர் ஏன், இன்னொரு கட்சி விஷயத்தில் தலையிட வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியும்.. அதேபோல, இந்த பேச்சை இவ்வளவு நாள் இல்லாமல், ஓபிஎஸ் ஏன் இப்போது எடுக்கிறார்? என்ற சலசலப்புகளும் ஆரம்பித்துவிட்டன..

தரகரா?
பிரதமர் நரேந்திர மோடி தரகர் வேலை செய்ததாக ஓபிஎஸ் சொல்கிறாரா? என கண்டன விமர்சனங்களும் எழுந்துவிட்டன.. ஏற்கனவே புகைந்துகொண்டிருக்கும் அதிமுகவில் இது மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, சொந்த கட்சி பிரச்சனையை, அவர்களுக்குள் பேசித்தான் தீர்த்து கொள்ள வேண்டுமே தவிர, இப்படி பிரதமர் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தி, அதன்மூலம் கட்சி பதவியை கைப்பற்ற நினைப்பதும், அல்லது எதிர்தரப்பை மிரட்டுவதற்காக பயன்படுத்த நினைப்பதும், 2 முறை முதல்வராக இருந்தவரின் மலிவு அரசியலாகவே கருதப்படுகிறது..!












Click it and Unblock the Notifications