உதயநிதிக்கு பயம்.. கேரவனில் ஒத்திகை பார்த்த விஜய் - ஆதவ் அர்ஜுனா.. கசிந்த தகவலால்.. சிவந்த திமுக
சென்னை: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர்.
இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தின. இந்த அதிர்வுகள் இன்னமும் நீடித்தபடி இருக்கின்றன. திமுக தலைமைக்கு ஏற்பட்ட கோபம், ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வைத்திருக்கிறது.

இந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தி தற்போது சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நூல் வெளியீட்டு விழா, மாலை 5 மணிக்கு தொடங்கும் என சிறப்பு அழைப்பிதழில் (வி.ஐ.பி. பாஸ்) சொல்லப்பட்டி ருந்தாலும் மாலை 6 மணிக்குத் தான் நிகழ்ச்சித் தொடங்கியது. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் விஜய். மற்ற விருந்தினர்களும் வந்துவிட்டனர்.
விஜய் தவிர்த்த மற்ற விருந்தினர்கள், ஸ்டேஜ்ஜுக்கு பின்புறமிருந்த ஓய்வு அறையில் காத்திருந்தனர். அதேசமயம், விஜய் மட்டும் கேரவனில் இருந்தார். அவருக்காக, தனி கேரவன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஆதவ் அர்ஜுனா. அந்த கேரவனில், விஜய்யும் ஆதவ்வும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். விழாவை திருமா தவிர்த்த விசயம் பிரதானமாக அவர்களின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. அப்போது, இந்த நிகழ்ச்சியை திருமா தவிர்த்துள்ளதன் பின்னணியை ஏற்கனவே விஜய்யிடம் ஆதவ் சொல்லியிருந்தாலும் மீண்டும் அதே பின்னணியை சொல்லியிருக்கிறார் ஆதவ்.
அதாவது, உங்களை கண்டு பயப்படுகிறார் உதயநிதி. நீங்களும் நாங்களும் (சிறுத்தைகள்) இந்த விழா மூலம் ஒன்றாக சேர்ந்துவிடுவோமோ என்கிற பயம். அதான் அவர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது. கட்சியில் கட்சிக்காக உழைச்சு பதவி கிடைச்சிருந்தா உதயநிதிக்கு பயம் வந்திருக்காது. நேரடியாக உயர்ந்த பதவி கிடைக்கும் போதுதான், எதிரிகளை பார்த்தால் பயம் வரும்.
அந்த பயம் தான், உங்களை எதிரியாக அவர்களை நினைக்க வைக்கிறது. அதனால்தான் உங்களோடு திருமா எங்கே கைக்கோர்த்திடுவோரா? என நினைத்து அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்தது என்று ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்கிறார். அதற்கு, என்னோடு மேடையில் திருமா இருந்தால், அவர், என்னை ஆதரிப்பார்ன்னு நானே எதிர்பார்க்காத போது, திமுக எப்படி அப்படி நினைக்கிறது? அப்படி நினைத்ததானால்தானே, விழாவை புறக்கணிக்க அவரை வலியுறுத்தியிருக் கிறார்கள்.
அதனால்தானே அவரும் தவிர்த்துள்ளார் என்று ஒருவித கிண்டல் தொணியில் பேசியிருக்கிறார் விஜய். இப்படி இருவரும் மாறி மாறி திமுகவை பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையில், திமுகவில் நடக்கும் மன்னர் அதிகாரத்தை இன்னைக்கு நான் பேசப்போறேன்னு சொல்லியிருக்கிறார் ஆதவ். அப்போது, ஆளும் கட்சியாக இருக்கும் அவர்களை பற்றி பேசாமல் எதை பேச முடியும்? புத்தக வெளியீட்டு விழா, கல்யாண விழா என எது கிடைத்தாலும் அரசியல் பேசறதை திமுக வாடிக்கையா வெச்சிருக்கு.
அதே பாணியில் நாமும் அரசியல் பேசித்தான் ஆகனும். நானும் பேசுவேன் என சொல்லியிருக்கிறார் விஜய். இப்படி கேரவனில் விஜய்யும் ஆதவும் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். கேரவனில் விஜய்யுடன், தான் இருந்ததை பற்றி தனக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டார் ஆதவ். அதாவது, திமுக எதிர்ப்பில் விஜய் எந்தளவுக்கு இருக்கிறார் என்கிற பேச்சு தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது இயல்பாக தாங்கள் பேசிக் கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதவ்.












Click it and Unblock the Notifications