அரசியலே இல்லை.. என்ன பேசினோம் தெரியுமா.. ஸ்டாலின், மம்தா பானர்ஜி கூட்டாக பேட்டி
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் அரசியல் ரீதியாக எதுவும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாஜக சார்பில் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் செயல்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகள் இணைய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் மூன்றாவது அணியை கட்டமைக்க முயற்சித்து வருகின்றனர்.
அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.. முதல்வர் ஸ்டாலின் என் சகோதரர்.. பாசமழை பொழிந்த மம்தா பானர்ஜி
சென்னை வந்த மம்தா பானர்ஜி
இந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த மம்தா பானர்ஜி, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
ஸ்டாலின் - மம்தா சந்திப்பு
மம்தா பானர்ஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் வாசலுக்கு வந்து பொன் ஆடை அணிவித்து வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் கூறுகையில், கடந்த முறை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழ்நாடு வந்தபோது, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறந்து வைத்தார். மேற்கு வங்க மாநிலத்திற்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று தமக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.
அரசியல் பேசவில்லை
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அழைப்பை நானும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தேர்தலுக்கான சந்திப்பு இல்ல. அரசியல் குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் திமுக தொடர்ந்து வரும் நிலையில், மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சியினர் உற்று நோக்கியிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பேட்டி அனைத்து விவகாரங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது.