சார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா?
சென்னை: வடசென்னையை மையமாக கொண்டு இயக்குநர் பா. ரஞ்சித் படைத்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதுவும் சார்பட்டா படத்தின் நாயகி துஷாரா விஜயனை முன்வைத்துதான் இந்த கொண்டாட்டம்.. அப்படி என்னங்க இந்த படத்துக்கும் திண்டுக்கல்லுக்கும் தொடர்பு?
Recommended Video
ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் குத்துசண்டையை மையமாக வைத்து அற்புதமான படைப்பை தந்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். வெறும் குத்துச் சண்டை படமாக இல்லாமல் அரசியல் களத்திலும் குஸ்தியை ஏற்படுத்தி உள்ளது சார்பட்டா பரம்பரை.
திமுக, காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி என வெளிப்படையாக 1975 கால அரசியலைப் பற்றி பேசுகிறது இந்த படம். குறிப்பாக எமர்ஜென்சி கால திமுகவினரை பற்றி அதிகமாகவே பேசி இருக்கிறது சார்பட்டா பரம்பரை.

திமுகவினர் கொண்டாட்டம்
அத்துடன் தமிழகத்தில் கள்ள கடத்தல், சாராயம் ஆகியவற்றுக்கு காரணம் அதிமுக, எம்ஜிஆர் என்கிற மறைமுக அரசியலையும் குறியீடுகளாக காட்டி இருக்கிறார் ரஞ்சித். எமர்ஜென்சியை எம்.ஜிஆர். ஆதரித்தார் என்பதை சுவரெழுத்து மூலம் கோடிட்டும் காண்பித்திருந்தார். இதனால் ஒட்டுமொத்த திமுகவினரும் சார்பட்டா பரம்பரையை கொண்டாடுகின்றனர்.

திண்டுக்கல் திமுக கொண்டாட்டம்
இவற்றுக்கு அப்பால் படத்தின் நாயகியான மாரியம்மா எனும் துஷாரா விஜயன்... திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் கொண்டாட்டத்துக்கு காரணமாக இருக்கிறார்... ஓ அப்படி என்றால் துஷாரா விஜயன், திண்டுக்கல்லை பூர்வீகமாகக் கொண்டவரா? ஆம் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷாரா விஜயன்.

திமுக பிரமுகர் மகள்
இந்த ஒரு காரணத்துக்காகவா திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் கொண்டாடுகின்றனர்? இல்லை.. காரணம் துஷாரா விஜயனின் தந்தை K Vijayan. யார் இந்த விஜயன்? திண்டுக்கல் மாவட்ட திமுக பிரமுகர்களில் ஒருவர். திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர். சாணார்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். இது போதாதா திண்டுக்கல் திமுகவினர் கொண்டாட்டங்களுக்கு!

துஷாராவின் பின்னணி
சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு பேசன் டிசைனிங் படித்து மாடலிங், குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன். அப்படியான சூழ்நிலையில்தான் சார்பட்டா பரம்பரையின் நாயகியானார் துஷாரா விஜயன்.

பழனி பிக்பாஸ் ஆரி
ஏற்கனவே பிக்பாஸ் வின்னர் ஆரி, திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். அதனால் பிக்பாஸில் ஆரி டைட்டில் வென்றபோது கெத்தாக கொண்டாடியது திண்டுக்கல் மாவட்டம். இப்போது சார்பட்டா துஷாரா விஜயனை முன்வைத்து திண்டுக்கல் திமுகவினர் கொண்டாடுகின்றனர். எங்க ஊருல ஷூட்டிங் மட்டும்தான் எடுப்பாய்ங்களா? நாங்களே ஆக்ட்டும் கொடுப்போம் அப்பு என்கிறது திண்டுக்கல் மண்.












Click it and Unblock the Notifications