அன்னிக்கு திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது சரின்னா.. இன்னிக்கு செந்தில் பாலாஜி சொல்றதும் சரிதான்!
சென்னை: கஜா புயல் பாதித்த இடங்களில் விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நடுங்கள் என அப்போதைய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது சரியென்றால் அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதும் சரிதான்!
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அரசு வென்றால் மின் தடை அதிகம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தனர். ஏனென்றால் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு இருந்தது.
இதை சுட்டிக் காட்டியே எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தன. ஸ்டாலினோ ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த கால தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு
அதில் ஒன்றுதான் மின்தடை. கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் படித்தும் பணியாற்றியும் வரும் நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

கருத்து
அப்போது அவர் கடந்த அதிமுக அரசு மின் பராமரிப்புகளை முறையாக செய்யவில்லை. இதோடு அணில்கள் கரண்ட் கம்பியில் தாவி சேதம் ஏற்படுத்துவதும் ஒரு காரணம் என செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதை கிண்டல் செய்து ராமதாஸ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கஜா புயல்
இதே போல் கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. இந்த பாதிப்புகள் அப்போதைய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனவாசனும் ஓ எஸ் மணியனும் ஆய்வு செய்தனர். அப்போது திண்டுக்கல்லார் கூறுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நகைப்பு
இவரது இந்த கருத்து பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியது. ஆனால் திண்டுக்கல்லார் சொன்னது சரிதான். புயல் பாதித்த பகுதிகள், சாலை மார்க்கமாக செல்ல இயலாத பகுதிகள், மலைபாங்கான இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் மின்கம்பங்கள், எச்டி பவர் போல்ஸ் ஆகியன கொண்டு வரப்பட்டு நடுவது வாடிக்கையான ஒன்றுதான்.

வெளிநாடுகள்
இது போன்ற வசதிகள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்பதற்கு பதிலாக விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் கேட்டுவிட்டார். அது போல் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது போல் அணில்களால் மின் தடை ஏற்படுவது உண்மைதான்.

அணில்கள்
மின் கம்பிகளில் அணில்கள் செல்லும் போது இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி இரண்டும் இணைவதால் மின் தடை ஏற்படுவது வெளிநாடுகளில் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த சம்பவம் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடந்துள்ளன. அமெரிக்காவில் கூட அணில்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications