ஆரம்பமே சொதப்புறாரோ.. விஜய் போட்ட முதல் உத்தரவே தோல்வி.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்.. பரிதாபம்
சென்னை: தவெகவின் 2 வருட அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு வியாழனாகப் பதிவாகியுள்ளது. தமிழகமே ஒரு வரலாற்று மாற்றத்திற்காகத் துடித்துக்கொண்டிருந்த வேளையில், நேரு விளையாட்டு அரங்கில் அரங்கேறவிருந்த "விஜய் எனும் புதிய அத்தியாயம்" கடைசி நிமிடத்தில் ஒரு பெரும் அரசியல் முட்டுக்கட்டையாக முடிந்துள்ளது.
நேரு ஸ்டேடியம் டூ கவர்னர் மாளிகை: என்ன நடந்தது?
நேற்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது நாம் அறிந்ததே. ஆனால், ஆளுநர் "மெஜாரிட்டி" ஆதாரங்களைக் கேட்டதுமே திரைக்கதை தலைகீழாக மாறியது.
நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த விஜய், தனது கட்சிக்கு 108 இடங்கள் இருப்பதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு இருப்பதாகவும்.. பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விரும்புவதாகவும் உரிமை கோரினார். இருப்பினும், 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் கடிதங்களை சமர்ப்பித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை திட்டவட்டமாகத் தெரிவித்தது.

முதல் 'நிர்வாக' உத்தரவும் முட்டுக்கட்டையும்
ஆளுநரைச் சந்தித்த நம்பிக்கையில், இன்று காலை பதவியேற்பு விழா நடைபெறும் என விஜய் தரப்பு முடிவு செய்தது. இதற்கான முன்னேற்பாடாக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) மூலம் பதவியேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை வெளியிடுமாறு விஜய் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளர் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பே அரசுத் துறைக்கு உத்தரவிட்டது தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இது வழக்கம்தான். புதிய அரசு வரும் முன் இப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். ஆளுநர் மாளிகையிலிருந்து முறையான அரசாணை (G.O.) வராமல், ஒரு கட்சித் தலைவரின் உத்தரவை அரசுத் துறையால் செயல்படுத்த முடியாது என அதிகாரிகள் தரப்பில் மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, விஜய் திட்டமிட்ட அந்த முதல் அரசு அறிவிப்பு வெளியாகாமல் போனது. அதோடு விஜய் உத்தரவை DIPR பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை.
நேரு ஸ்டேடியம்: ரத்து செய்யப்பட்ட ஏற்பாடுகள்
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழாவிற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றன. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் நீடிக்கும் இழுபறி மற்றும் ஆளுநரின் அனுமதி கிடைக்காதது ஆகிய காரணங்களால் இன்று காலை அந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
அரசியல் நிலவரம்
தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான மீதமுள்ள 6 இடங்களுக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை ஆகியவை விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு முதல் சவாலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், குதிரை பேரத்தைத் தவிர்க்க தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் ஆதரவு கடிதங்கள் திரட்டப்பட்டால், நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications