ஓணத்துக்கு ஓடி வராங்க! விநாயகர் சதுர்த்திக்கு என்ன ஆச்சு? விஜய் ரூட் தப்பாயிருக்கு! மோகன் ஜி தாக்கு!
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லியதை பார்த்தோமேயானால் விஜய்யும் தவறான பாதையில் செல்கிறாரோ என நினைக்க தோன்றுவதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
கோட் திரைப்படம் வெளியானதை அடுத்து அந்த படத்திற்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் வருகின்றன. அது போல் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. விஜய் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லிவிட்டு விநாயகர் சதுர்த்திக்கு சொல்லாமல் விட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மோகன் ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: கோட் படத்தை பார்த்துவிட்டு நான் எனது விமர்சனத்தை (ரெவ்யூ) தெரிவித்திருந்தேனே! வெங்கட் பிரபு நன்றாக இயக்கியுள்ளார். விஜய்யின் அப்பா கேரக்டர் ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் கூட அந்த கேரக்டரை எக்ஸ்டென்ட் செய்திருக்கலாம்.
டீ ஏஜிங் கேரக்டரை விட அப்பா கேரக்டர் நன்றாக இருந்தது. கோட் மிகவும் நல்ல படம். தல என்றால் கிரிக்கெட்டில் தோனி, சினிமாவில் தல என்றால் அது அஜித் சார் தான். ஏஐ மூலம் விஜயகாந்த் சாரை அறிமுகப்படுத்திய போது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் போக போக விஜய் சார் பாணியில் விஜயகாந்த் சார் முகத்தை பார்த்த போதுதான் புரிந்தது.
விஜயகாந்த் சாரின் இளமையான தோற்றத்தில் கோட் படத்தில் காட்டியிருக்கிறார்கள். உண்மையில் விஜயகாந்த் சாருக்கு ஒரு மரியாதை செலுத்தும் தருணமாக இருந்தது. எனக்கு அது போல் செயற்கை நுண்ணறிவில் ஒரு கேரக்டரை உருவாக்க வேண்டும் என்றால் சிவாஜி சாரை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழகத்திற்கு ஒரு புதிய தலைவராக விஜய் வருவது நல்ல விஷயம்தான். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது, ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது என்பதை பார்க்கும் போது விஜய் சாரும் தவறான ரூட்டில் போகிறாரோ என வருத்தமாக இருக்கிறது. இந்துக்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவே பயப்படுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டால் உடனே பாஜகவுக்கு ஆதரவு என கதை கட்டிவிடுகிறார்கள். அதை சரி செய்துக் கொண்டால் எல்லா தலைவர்களும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார்கள் என நம்புகிறேன். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது வேறு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது வேறு! இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
அது போல் இவர் மேலும் கூறுகையில் கேரள சினிமா மட்டுமில்லை, தமிழ் சினிமாவிலும் பரச்சினை இருக்கு. ஆனால் யாரும் பேச மாட்டாங்க. தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைகளே இல்லை என யாராவது சொன்னால் அதை யாரும் நம்பாதீர்கள் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு சுவாமிமலையில் நடந்த விழாவில் பேசுகையில் பழனியில் இருப்பது முருகனின் சிலை இல்லை, போகர் சிலை என சுகி சிவம் கூறுகிறார். தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ள போகர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. நாத்திகர்களால் நமக்கு பிரச்னையில்லை, அவர்கள் இருக்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். ஆனால், ஆத்திகம் பேசிக் கொண்டு நாத்தியவாதியாக மாறுபவர்களை விட்டு வைக்கக் கூடாது. அவர்கள் துரோகிகள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications