'வடவர்கள் மீது வன்மம் வேண்டாம்'.. இயக்குநர் நவீன் என்ன சொல்கிறார்.. யாரை சொல்கிறார்? பெரும் விவாதம்
இயக்குநர் நவீன் ட்வீட் பதிவில், வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல என கூறியுள்ளார்.
சென்னை: வட இந்தியர்கள் வருகை குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இயக்குநர் நவீன் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில் அண்மையில் ரயிலில் சென்ற ஒருவர் வட இந்தியரை கடுமையாக தாக்கினார். இந்த வீடியோ வைரலான உடனேயே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வட இந்தியர் ரயிலில் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். வட இந்தியர்களுக்கு எதிராக சிலர் பேசுவதை பார்த்தே இப்படி நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

வன்மத்தை விதைப்பதா?
இந்நிலையில் இயக்குனர் நவீன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே இயக்குநர் நவீன் வடவர்கள் மீது வன்மம் வேண்டாம் என்று சொல்கிறார், யாரை சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் மறைமுகமாக குறிப்பிடுகிறாரா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சீமான் தான் வடஇந்தியர்கள் வருகை குறித்து பேசிவருவதாகவும் எனவே அவருக்கு நவீன் இந்த அறிவுரை கூறுகிறாரா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

வாழ்விடம் நமக்கு இது
இயக்குநர் நவீனுக்கு ட்விட்டரில் சிலர் பதிலடியும் கொடுத்துள்ளார்கள். "மக்களுக்கு மட்டுமே அறிவுரை சொல்வது என்பது பொருப்பை மடைமாற்றுவது. அரசுகளின் பொறுப்பு என்ன? வடவர்கள் வளர்ந்த அம்மாநில சூழலால் இங்கு ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி? அவர்களின் தேவை பொருளீட்டல் மட்டுமே. தமிழ் தொழிலாளர்களின் வாழ்விடமே இதுதான்" என்று பாலமுருகன் என்பவர் கூறியுள்ளார்.

குற்றங்கள் தடுப்பது
சரவணக்குமார் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைக்கவில்லை. வருகையை முறைப்படுத்த சொல்கிறார்கள். வாக்குரிமை வழங்கக்கூடாது என்கிறார்கள். வாக்குரிமை அளிப்பதால் ஏற்படக்கூடிய சிக்கலை பேசுகிறார்கள். உள்நுழைவு சீட்டு கொடுத்து சீர்செய்வதால் குற்றங்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நவீனுக்கு கேள்வி
நீங்கள் சொல்வது உண்மை மற்றும் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று.. மற்றொன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது., உங்கள் சம்பளத்தை விட பலமடங்கு குறைவாக உங்கள் வேலைக்கு ஆட்கள் கிடைக்கும் போது உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமா... என கார்த்திக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குனர் நவீனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதேநேரம் இயக்குநர் நவீன் கருத்துக்கு ஆதரவு பலர் தெரிவித்து வருகிறார்கள். தென் மாநில மக்கள் பெரும்பாலும் கல்வியில் மேன்மைபெற்று நல்ல பல வேலைகளுக்கு சென்றுவிட்டதால் உருவான வெற்றிடம்,எளிய சிறிய வேலைகளுக்கும் வடக்கிலிருந்து ஆட்கள் வரும் நிலையை தவிர்க்க முடியாது என உடோபியா என்பவர் கூறியுள்ளார்.

சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும் போது, "பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் குடியேற்றம் அதிகம் நடந்துள்ளது. திட்டமிட்டு போர் தொடுக்கிறார்கள். இந்த நிலத்தின் அதிகாரம் அரசியலை அவர்கள் தீர்மானிக்கும் காலம் வரலாம். என்னை அதிகாரமற்ற, அரசியலற்ற, நிலமற்ற கூலிகளாக்கி அடித்து விரட்டலாம்.. அது தான் இலங்கையில் நடந்தது. இங்கும் நடக்கலாம் என்று பேசினார். வட இந்தியர்கள் தான் குற்றசம்பவங்கள் அதிகம் நடக்க காரணம் என்றும் நகை பறிப்பது, கஞ்சா விற்பது வட இந்தியர்கள் தான் என்றும் சீமான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications