”வேங்கைவயல்” பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிரட்டல்.. துணிவில்லாத அமைச்சர் கயல்விழி.. பா.இரஞ்சித் கண்டனம்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல்துறையினர் மிரட்டி வருவதாக இயக்குநர் பா.இரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்தே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் பொறுப்பேற்று வருஷம் 2ஆகப் போகுது! சட்டசபையில் தடுமாற்றத்துடன் பேசிய கயல்விழி செல்வராஜ்!
ஆட்சியர் கவிதா ராமு
அப்போது பட்டியலின மக்களின் புகார் அடிப்படையில், கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவவில்லை என்பதும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.
இரட்டை குவளை
அப்போது சாமி வந்ததை போல் நடித்து பட்டியலின மக்களை இழிவாக பேசிய சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிங்கம்மாள், மூக்கையா இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை குழு
இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. இதனிடையே குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்படுவர். இதுவரை 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் காவல்துறையினர் விசாரணை தீவிரமானது.
இயக்குநர் பா.இரஞ்சித் குற்றச்சாட்டு
இந்த நிலையில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக் கொள்ள காவல்துறையினர் மிரட்டி வருவதாக இயக்குநர் பா.இரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!
தனித்தொகுதி எம்எல்ஏ-க்களுக்கு கண்டனம்
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்! என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி வருகிறது.