பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக ஆனந்தன்..பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கும் பதவி.. பா.ரஞ்சித் சொன்ன வார்த்தை!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இருவரும் தலித் மக்கள் நலனின் அக்கறை கொண்டு களம் காண வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக பா.ரஞ்சித் வருவாரா என்ற கேள்வியை எழ வைத்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த உடனேயே அங்கு வந்தது முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை இயக்குனர் ரஞ்சித் கண்ணீர் மல்கவே காட்சியளித்தார்.
ஆம்ஸ்ட்ராங் உடனான நெருக்கம் காரணமாக சிறுவயதிலிருந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்றார் ரஞ்சித். மேலும் அக்கட்சியின் அரசியல் பயிலரங்குகளில் பங்கெடுத்ததோடு நிறைய இடங்களில் அக்கட்சிக்காக பேசி வந்திருக்கிறார். அதே நேரத்தில் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். மார்கழியில் மக்கள் இசை, வானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவரே அக்கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில தலைவராக நியமனம் செய்யப்படுவார் என யூகங்கள் வெளியான நிலையில், இருவருமே அப்பதவியை ஏற்க மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இருவரும் தலித் மக்கள் நலனின் அக்கறை கொண்டு களம் காண வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன். " என கூறியுள்ளார். முன்னதாக பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானதும், அவரது நண்பர்கள் பலரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications