பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்- வசந்த பாலன் பேச்சு
சென்னை: 'வெயில்' படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித்தின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பார்வையே மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் பி.கே.ரோஸி திரைப்பட விழா சென்னையில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வசந்தபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், "தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது. நாகராஜ் மஞ்சுலே வந்தபிறகு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் வருகைக்குப் பின் தமிழ் சினிமாவில் நிறைய புதிய உரையாடகள் துவங்கியிருக்கின்றன.
'வெயில்' படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை, சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்.
மொத்த தமிழ் சினிமாவிலும் இந்த விஷயம் மாறிவிட்டது. இப்போது வந்த பெரிய படத்தில் தூய்மைப் பணியாளரை குறை சொன்னாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் எழுதும் அளவுக்கு அரசியல் படுத்தப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் படம் கிடைத்த பிறகு, பணம் வந்த பிறகு திருமண மண்டபம் கட்டலாம், பங்களா வாங்கலாம், ஆனால் பா.ரஞ்சித் குகை நூலகத்தை கட்டி இருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி போன்ற படங்களை இயக்கி தனக்கான தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் வசந்தபாலன். மனிதர்களின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் தேர்ந்த வசந்தபாலன் படங்கள் பலருக்கும் பிடித்தமானவை.












Click it and Unblock the Notifications