ஆம்ஸ்ட்ராங் கொலை! குற்றவாளிகள் யார் என்பது விசாரணையில்தான் தெரியவரும்- தழுதழுத்த குரலில் வெற்றிமாறன்
சென்னை: பகுஜன் சமாஜ் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி செலுத்தினார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

டூவீலர்களில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொலை வெறி தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்கை அகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆம்ஸ்ட்ராங் மரணம்: இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர் தலைநகரிலேயே இதுபோல வெட்டி கொல்லப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அஞ்சலி: இந்தச் சூழலில் கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீசில் சரணடைந்தனர். மேலும், 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது மொத்தம் 11 பேர் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களிடம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். அவர் இன்றைய தினம் உத்தர பிரதேசத்தில் இருந்து சென்னை வருகிறார்.
வெற்றிமாறன்: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நல்வழிப்படுத்திய ஒரு பெரிய ஆளுமை.. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரால் உத்வேகம் பெற்று இன்று வெவ்வேறு இடங்களில் படித்து இருக்கும் இளைஞர்களுக்கும், படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கும் அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவரது உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்கள் விருப்பம் எதுவோ.. அதைச் செய்வது சரி என்று எனக்குத் தோன்றுகிறது.
வன்மையாக கண்டிக்கத்தக்கது: இந்த படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கட்சியின் மாநில தலைவரின் மரணம் இப்படி நடந்திருக்கக் கூடாது. இந்த கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது தெரிய வரும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அதேநேரம் இவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications