சென்னை டூ இலங்கை.. காரில் நூதனமாக கடத்தப்பட்ட ரூ.50.65 கோடி மெத்தாம்ப்டமைன் போதைப்பொருள் பறிமுதல்!
சென்னை: சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.50.65 கோடி மதிப்புள்ள 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் என்ற போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னையிலிருந்து மூன்று நபர்கள் போதைப் பொருட்களை தமிழகத்தின் தென் கடலோரப் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், 29.08.2024, 30.08.2024 ஆகிய தேதிகளில் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையால், சென்னை புறநகர் பகுதியான பொத்தேரி அருகே அவர்களின் வாகனத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டல அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனையிட்டபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குழியில், 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் போதைப் பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர்களின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விற்பனை தொகையான ரூ.1.30 கோடி ரொக்கமாகவும், குற்றவாளிகள் பயன்படுத்திய மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜூன் மாதமும் இதேபோல 1.47 கிலோ கிராம் மெத்தாம்பேட்டமைன் பொதைப் பொருள் இலங்கையைச் சேர்ந்த 2 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது கிருஷ்ணகுமாரி, முகமது ரிசாலுதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகுமாரி, ரிசாலுதீன் 2 பேரும்தான் போதைக் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. 2021-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்ட காசிலிங்கம் என்பவரது மனைவிதான் கிருஷ்ணகுமாரி. சிறையில் இருந்தபடியே மனைவி கிருஷ்ணகுமாரி மூலம் காசிலிங்கம் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை கண்காணித்து வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னை ராயப்பேட்டை பகுதியிலும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications