க்ரிப்டோ கரன்சியில் கோடி கோடியாக முதலீடு? முன்னாள் அமைச்சர்களுக்கு செக்? தோண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்களா, அதில் பணம் பதுக்கி உள்ளனரா என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
க்ரிப்டோ கரன்சி தற்போது உலகம் முழுக்க வேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் கரன்சியான க்ரிப்டோ கரன்சிகளில் பிட்காயின் தொடங்கி டாட்ஜ் காயின் வரை பல வகை கரன்சிகள் வந்துள்ளன. எலான் மஸ்க் தொடங்கி சிறு வணிகர்கள் வரை பலர் தற்போது க்ரிப்டோ கரன்சியில் வேகமாக முதலீடு செய்து வருகிறார்கள்.
வெகு சில வருடங்களில் க்ரிப்டோ கரன்சிகளின் மதிப்பு விண்ணை தொட்டுள்ளது. அதிலும் க்ரிப்டோ கரன்சிகளின் ஒருவகையான பிட்காயின் உலகின் பல நாட்டு கரன்சி மதிப்பை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது. உதாரணமாக உங்களிடம் 1 பிட்காயின் இருந்தால் போதும் தஞ்சாவூர் பஸ் ஸ்டான்ட் அருகில் 49 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி விடலாம்.

மதிப்பு
ஆம் 1 பிட் காயினின் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 49 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் என்ன இந்தியாவில் நீங்கள் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு மட்டுமே செய்ய முடியும். இதில் எவ்வளவு மதிப்பு உயர்கிறதோ அதை பார்த்து நீங்கள் சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இன்னும் க்ரிப்டோ கரன்சி பரிவர்த்தனை அனுமதிக்கப்படவில்லை (ஸோ தஞ்சாவூரில் வீடெல்லாம் வாங்க முடியாது). அதாவது இதில் முதலீடு செய்யலாம். ஆனால் க்ரிப்டோ கரன்சியை வைத்து இந்திய மார்க்கெட் உலகில் பரிவர்த்தனை எதையும் மேற்கொள்ள முடியாது.

பாதுகாப்பு
புதிய தொழில்நுட்பமான பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் க்ரிப்டோ கரன்சி இயங்கி வரும் நிலையில் இதில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. முக்கியமாக பல கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள், கொள்ளை, கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்கள் இதை பணம் பதுக்கவும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக அரசியல்வாதிகள் தங்கள் கணக்கில் வராத பணங்களை க்ரிப்டோ கரன்சியாக எளிதாக பதுக்கிக்கொள்ள முடியும்.

பதுக்கல்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்களா, அதில் பணம் பதுக்கி உள்ளனரா என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரம் அளித்த தகவலின்படி, சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்களா என்று ஆராய்ந்து வருகிறோம்.

பணம்
தங்களின் கருப்பு பணம், வருமானத்திற்கு புறம்பான பணம் ஆகியவற்றை இவர்கள் க்ரிப்டோ கரன்சியில் பதுக்கி வைத்து இருக்கிறார்களா என்று தோண்ட துவங்கி உள்ளோம். க்ரிப்டோ கரன்சியில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், இதில் எளிதாக பணம் பதுக்கவும் முடியும். பொது வங்கிக்கு கீழ் இது வராத காரணத்தால் பணம் பதுக்கும் சொர்க்கமாக க்ரிப்டோ கரன்சி உலகு இருக்கிறது. இதனால் இங்கு முன்னாள் அமைச்சர்கள் பணம் பதுக்கி உள்ளனரா என்று சோதித்து வருகிறோம்.

4 அமைச்சர்கள்
சமீபத்தில் 4 அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினோம். இதில் பல ஆவணங்களை கைப்பற்றினோம். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் யாராவது க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து உள்ளார்களா என்று சோதனை செய்ய இருக்கிறோம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. இந்த விசாரணை வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

முடிவு
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர ரெய்டு நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கேசி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் கடந்த வாரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது க்ரிப்டோ கரன்சி குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications