குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம்.. அதிகாரிகளை எதிர்த்து காலி குடங்களுடன் வீதிக்கு வந்த மக்கள்
Recommended Video
சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அலைக்கழிக்கப்பட்டு வரும் பொதுமக்கள், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் சாலையில், 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றுஅப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி ஒருவர் கூறுகையில், தங்களது பகுதிக்கு குடிநீர் விநியோகம் அடியோடு நின்றுவிட்டது. குடிநீர் வாரிய பொறியாளரை மிரட்டி, சிலர் தங்கள் பகுதிக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 4 லாரி தண்ணீரை எடுத்து சென்றுவிடுவதாக புகார் தெரிவித்தார்,
மேலும் பேசிய சிலர் உரிய தண்ணீரை தங்களுக்கு வழங்க கோரி நியாயம் கேட்டால், தற்போது இணைப்பில் இருக்க கூடிய தண்ணீரையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் எனகூறினர். போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதே போல அவினாசி அருகே உப்பிலிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி கூறிய மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்கள், தண்ணீருக்காக சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை எடுத்து கொண்டு தெருதெருவாக அலைவதாக வேதனை தெரிவித்தனர். இதனால் சில நாட்களில் வேலைக்கு செல்வது கூட பாதிக்கப்பட்டு வருமானத்தை இழக்க நேர்வதாக கூறியுள்ளனர்.
இது பற்றி எத்தனையோ முறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து நேரில் பாாவையிடவுமில்லை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க முன்வரவுமில்லை. எனவே வேறு வழியின்றி தற்போது போராட்டத்தில் குதித்துள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடந்த 7 ஆண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை என்று, மல்லாசமுத்திரம் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேசி சமாதானம் செய்தனர். சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர.












Click it and Unblock the Notifications