ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு.. கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு
திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆ.ராசா மற்றும் நண்பர்கள்
7 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் பரமேஷ் குமார் மற்றும் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோருக்கு எதிராக கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானத்தை விட 579% அதிகமாக, அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு நீதிமன்றம்
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக எம்.பி ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர்.

ஒத்திவைப்பு
நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக எம்.பி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications