தீபாவளி! கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள்.. ஒரே நாளில் இத்தனை பேர் பயணமா?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ஏராளமான பொதுமக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையிலிருந்து பல்வேறு தரப்பினர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் அல்லாமல் சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையை பொருத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதற்கு அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக இருந்தது. அதே நேரம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தென்மாவட்டம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.
ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது போல் ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்லாது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறுகையில் அரசு நிர்ணயித்த கட்டணங்களையே வசூலித்து வருகிறோம். ஆம்னி பேருந்துகளில் மக்கள் எந்த சிரமமும் இன்றி பயணிக்க கடந்த ஒரு வாரமாக ஒரு டீமை அமைத்து பணியாற்றி வருகிறோம்.
நேற்றைய தினம் 1320 பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் 95 முதல் 97 சதவீதம் வரை பயணிகள் பயணம் செய்தனர். இன்றைய தினம் 1650 பேருந்துகளில் 90 சதவீதம் முன் பதிவு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கூடுதலாக 100 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப 40 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் அந்தளவுக்கு போக்குவரத்து பாதிப்பு இல்லை. காவல் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அது போல் கிளாம்பாக்கத்தில் கூட தற்காலிக பேருந்து நிலையம் நன்றாக அமைத்துள்ளனர். எந்த பிரச்சினையும் இல்லாமல் சேவை செய்கிறோம். கட்டண த்தை பொருத்தவரை அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வாங்குகிறோம். ஒரு சில வெளியூர்காரர்கள் அலுவலகத்தில் புக்கிங் செய்யும் போது தவறாக கட்டணத்தை நிர்ணயித்தாலும் நாங்கள் அதை சரி செய்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications