டாஸ்மாக் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 20 சதவீதம் போனஸ் அறிவித்தது அரசு ஆணை
சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என நாடே களைகட்டும். பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ், இனிப்புகள் என தீபாவளி பரிசுகள் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் பணியாளர்களுக்கு (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025 -2026 இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (சி மற்றும் டி) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப் பணியாளர்கள் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.
இதனடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications