இருள் விலகி.. ஒளி பரவட்டும்! நள்ளிரவு பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்ற மக்கள்!
சென்னை: நாடு முழுவதும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை வரவேற்றுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் என பல நகரங்களிலும் நள்ளிரவு வெடி வெடித்து தீபாவளியை மக்கள் வரவேற்றிருக்கின்றனர். வாழ்வில் இருள் விலகி ஒளி பரவ வேண்டும் என்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதனையடுத்து சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டிருக்கின்றன. அதேபோல தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடை, பட்டாசு மற்றும் இனிப்பு கடைகளில் கூட்டம் அலைமோதி உள்ளது.
சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், வேலூர், தஞ்சை என இரண்டாம் தர நகரங்களிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நகரங்களில் நள்ளிரவு 12 மணியை தாண்டி பல கடைகளில் விற்பனை தீவிரமாக நடந்திருக்கிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று மழை இல்லாததால் விற்பனை சிறப்பாக நடந்திருப்பதாக வியாபாரிகள் கூறியிருக்கின்றனர்.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை நடந்துள்ளது. இதே கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை நடந்திருக்கிறது.
தீபாவளி பண்டிகை மற்றும் இன்று ஐப்பசி மாத முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூபாய் 2500-க்கும், பிச்சிப்பூ ரூபாய் 1750-க்கும் விற்பனையாகியுள்ளன.












Click it and Unblock the Notifications