சென்னை தாம்பரம் - தூத்துக்குடிக்கு நாளை தீபாவளி சிறப்பு ரயில்.. உடனே முன்பதிவு செய்யலாம்
சென்னை: தீபாவளியையொட்டி தூத்துக்குடி - தாம்பரம், தாம்பரம் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று பயணத்தை தொடங்கும் சிறப்பு ரயில் மொத்தம் 4 நாட்கள் இயங்க உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பஸ்கள், ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கும், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி - தாம்பரம் அதிவிரைவு திருவிழா சிறப்பு ரயில் (வண்டி எண்: 06188)இன்று மற்றும் நவம்பர் 4ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு தாம்பரத்தை அடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக தாம்பரம் - தூத்துக்குடி அதிவிரைவு திருவிழா சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக துத்திமேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கள்ளல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டடுக்கு பெட்டி ஒன்று, ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 2, ஸ்லீப்பர் கோச் 9, 4 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.












Click it and Unblock the Notifications