தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் தொண்டர்கள் கதறி அழுகிறார்கள்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நிமோனியா தொற்று காரணமாக இன்று அவருக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து தேமுதிக தொண்டர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு சாலிகிராமம் வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் குவிந்தனர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.
பின்னர் அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே சாரை சாரையாக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர்.

இன்னும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடுக்கு செல்லும் போக்குவரத்தை போலீஸார் திருப்பி விட்டுள்ளார்கள். கோயம்பேடு முழுக்க மக்கள் தலைகளாக உள்ளனர்.
விஜயகாந்த் கட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் கோயம்பேடு பஸ் ஸ்டான்ட், கோயம்பேடு மெட்ரோ, தனியார் வணிக வளாகம் என இருப்பதால் அங்கு கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருடைய உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் ஆகியோர் விஜயகாந்தின் உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அது போல் மெரினாவில் விஜயகாந்தை நல்லடக்கம் செய்ய அரசு இடம் கொடுக்க வேண்டும், அங்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாளை விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுவதாக உள்ள இடத்தில் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications